திராவிடக் கட்சிகளின் பாடத் திட்டமே ஆசிரியர் கொலைகளுக்குக் காரணம்-பாஜக

மதுரை வந்த அவர் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில்,
சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் பாஜக போட்டியிட உள்ளது. போட்டியிடும் வேட்பாளர் குறித்து விரைவில் அறிவிக்கப்படும். தமிழகத்தில் மின்வெட்டு பிரச்சனையை தீர்க்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆட்சிக்கு வந்து 100 நாட்களில் மின்வெட்டு பிரச்னையை தீர்ப்போம் என்று அதிமுக தெரிவித்திருந்தது. ஆனால் இன்னும் மின்வெட்டு பிரச்னை தீர்ந்தபாடில்லை. மின்வெட்டு பிரச்னையை தீர்க்க கூடங் குளம் அணுமின் நிலையம் திறக்கப்பட வேண்டும். ஆனால் கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராகப் போராடுபவர்களுக்கு மாநில அரசு ஆதரவளிப்பது போல் நடந்துகொள்கிறது.
கூடங்குளம் அணுமின் நிலையத்தை திறக்க வேண்டும் என்று பெரும்பாலான மக்கள் விரும்புகின்றனர். ஆனால் ஒரு சிறு குழு அணுமின் நிலையத்தை திறக்கவிடமாட்டோம் என போராட்டம் நடத்தி கொண்டு இருக்கிறது.
இந்த போராட்டத்தை கண்டு முதல்வர் ஜெயலலிதா மவுனம் காத்து வருகிறார். சிறுபான்மையினர் ஓட்டு போய்விடும் என்ற அச்சம் தான் இதற்கு காரணம். அணுமின் நிலையம் வேண்டாம் என்று வழிப்பாட்டு தலமான இடிந்தகரையில் போராட்டம் நடக்கிறது. இதற்கு யார் அனுமதி கொடுத்தது?
கூடங்குளம் அணுமின் நிலையத்தை திறக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தி வருகிற 24-ந் தேதி பாரதீய ஜனதா சார்பில் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்த முடிவு செய்திருந்தோம். அதில் தற்போது சிறு மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. 24-ந் தேதி வெள்ளிக்கிழமையாக இருப்பதால், அன்றைய தினம் பலரும் கோவிலுக்கு செல்வார்கள். அதனால் எங்களது போராட்டத்தை 27-ந் தேதிக்கு தள்ளி வைத்து உள்ளோம். அன்றைய தினம் மெழுகுவர்த்தி, சிம்னி விளக்கு, டார்ச்லைட், லாந்தர் விளக்கு போன்றவற்றை கையில் ஏந்தி மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்துவோம்.
எங்கள் கட்சியின் மாநில மாநாடு மதுரையில் ஏப்ரல் மாதம் 28 மற்றும் 29-ந் தேதிகளில் ரிங்ரோட்டில் நடக்கிறது. அதில் அத்வானி, நிதின் கட்காரி உள்பட தேசிய தலைவர்கள் கலந்துகொள்கின்றனர்.
தமிகத்தில் மாணவர்கள் ஆசிரியர்களை கொல்வது, மாணவர்களுக்குள் மோதல், தற்கொலை போன்ற சம்பவங்கள் அதிகளவில் நடக்கின்றன. இதற்கு காரணம் தமிழகத்தை தொடர்ச்சியாக ஆண்டு வரும் திராவிட கட்சிகள் தான் காரணம். அவர்களுடைய கல்விதிட்டம், மாணவர்களை இந்த நிலைக்கு கொண்டு சென்று உள்ளது.
முன்பெல்லாம், ஆத்திச்சூடி, நாலடியார் போன்றவை பாடப்புத்தகங்களில் இருக்கும். ஆசிரியர்களுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று கற்று தரப்படும். ஆனால் அந்த சூழல் தற்போது இல்லை. எனவே மாணவர்களிடையே நன்னெறிகளை வளர்க்க கொன்றைவேந்தன், நாலடியார், ஆத்திச்சூடி பாடங்களைச் சேர்க்க வேண்டும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications