திண்டுக்கல் மாவட்ட கலெக்டராக என்.வெங்கடாசலம் நியமனம் - தமிழக அரசு உத்தரவு
மதுரை: விழுப்புரம் மாவட்ட வருவாய்த் துறை அதிகாரியாக இருந்த என்.வெங்கடாசலம் திண்டுக்கல் மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் தேவேந்திர நாத் சாரங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது
சென்னை மாநகராட்சியில் துணை ஆணையராக (வருவாய் - நிதி) இருந்த ஹனீஷ் சாப்ரா ஏற்கனவே மாற்றப்பட்டுள்ளார். அவரது பணியில் நாகராஜன் பணியாற்றுவார். விழுப்புரம் மாவட்ட வருவாய்த் துறை அதிகாரியாக உள்ள என்.வெங்கடாசலம் திண்டுக்கல் மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.
திருச்சி மாநகராட்சியில் ஆணையராகப் பணியாற்றும் வீரராகவராவ், கடலூர் மாவட்ட திட்ட மேலாண்மைப் பிரிவின் திட்ட அதிகாரியாகவும், கூடுதல் கலெக்டராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேபோல தஞ்சை மாவட்ட முன்னாள் ஆட்சியராக இருந்த சி.முனியநாதன், தமிழ்நாடு மீன்வளத்துறை மேலாண்மை இயக்குனராகப் பணியாற்றிய ராஜேந்திர பட்னாவுக்குப் பதிலாக நியமிக்கப்பட்டுள்ளார் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.