அமெரிக்க சதிதான்: கூடங்குளம் தொடர்பான மன்மோகன் கருத்துக்கு ரஷியா ஆதரவு

கூடங்குளம் போராட்டம்
ரஷ்யா உதவியுடனான தமிழ்நாட்டின் கூடங்குளத்தில் அணுமின் நிலையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஆனால் கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து கடந்த 7 மாதங்களுக்கும் மேலாக தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இவ்விவகாரம் தொடர்பாக வல்லுநர் குழுவும் அமைக்கப்பட்டு போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது
பிரதமர் கருத்து
இந்நிலையில் புதிய திருப்பமாக கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிரான போராட்டத்தை அமெரிக்காவின் தன்னார்வ தொண்டு நிறுவனங்களே தூண்டிவிடுவதாகக் கூறி பிரதமர் மன்மோகன்சிங் அதிரடியைக் கிளப்பினார்.
மன்மோகன்சிங் குற்றச்சாட்டை போராட்டக்காரர்கள் கடுமையாக மறுத்துள்ளனர்.
ஆனால் கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிரான போராட்டத்தைத் தூண்டியதாக கருதப்படும் 3 தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் அனுமதியை ரத்து செய்துள்ளதாக மத்திய அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.
இதனையும் மறுத்துள்ள கூடங்குளம் போராட்டக் குழுவின் ஒருங்கிணைப்பாளர், தன்னார்வ தொண்டு நிறுவனங்களிடமிருந்து பணம் பெற்றிருப்பதை நிரூபித்தால் தூக்கு தண்டனையை ஏற்கத் தயார் என்று கூறியிருந்தார்.
ரஷ்யா ஆதரவு
இதனிடையே அமெரிக்க தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் தூண்டுதல் குறித்த பிரதமர் மன்மோகன்சிங் கருத்தை இந்தியாவுக்கான ரசிய தூதர் வரவேற்றுள்ளார்.
ரசிய தூதர் அலெக்சாண்டர் எம் கட்கின் இது தொடர்பாக கூறியதாவது;
கூடங்குளம் போராட்டம் தொடர்பான ரஷ்யாவின் சந்தேகத்தை பிரதமர் மன்மோகன்சிங் கருத்து உறுதிப்படுத்துகிறது. இக்குற்றச்சாட்டைத்தான் நாங்கள் நீண்டகாலமாக கூறி வருகிறோம்.
ஜப்பானின் புகுஷிமா அணு உலை விபத்துக்குப் பிறகு 6 ம்மாதங்கள் கழித்து திடீரென தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், கூடங்குளத்துக்கு எதிராக குரல் கொடுத்தது சந்தேகத்தை ஏற்படுத்தியிருந்தது. இப்போது அது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.
உலகிலேயே மிகவும் பாதுகாப்பான அணுமின் நிலையமாக கூடங்குளம் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.












Click it and Unblock the Notifications