நக்சல் பாதித்த பகுதிகளில் ரூ. 800 கோடியில் 400 காவல் நிலையங்கள்: முதற்கட்டமாக ரூ.120 கோடி ஒதுக்கீடு
டெல்லி: நக்சலைட் வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் 400 காவல் நிலையங்கள் அமைக்கப்படவிருக்கின்றன. அதற்காக முதல் கட்டமாக ரூ. 120 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.
நக்சலைட்டுகளின் வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள 83 மாவட்டங்களை உள்துறை அமைச்சகம் அடையாளம் கண்டுள்ளது. அந்த மாவட்டங்களில் தலா ரூ.2 கோடி செலவில் 400 காவல் நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. இதில் முதல் கட்டமாக மத்திய அரசு ரூ.120 கோடி ஒதுக்கியுள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் பீகாரில் 85 காவல் நிலையங்களும், சத்தீஸ்கரில் 75ம், ஜார்க்கண்டில் 75ம், ஒடிஷாவில் 70ம், மேற்கு வங்கத்தில் 18ம், மத்திய பிரதேசத்தில் 12 காவல் நிலையங்களும் அமைக்கப்படுகின்றன. இது தவிர ஆந்திராவில் 40ம், உத்தர பிரதேசத்தில் 15ம் மற்றும் மகாராஷ்டிராவில் 10 காவல் நிலையங்களும் கட்டப்படுகின்றன.
இந்த திட்டத்தின் கீழ் கட்டப்படும் காவல் நிலையங்களுக்கு ஆகும் செலவில் 80 சதவீதத்தை மத்திய அரசு அளிக்கும், மீதமுள்ள 20 சதவீதத்தை அந்தந்த மாநில அரசுகள் அளிக்க வேண்டும்.
கடந்த 2011ம் ஆண்டில் மட்டும் நக்சலைட்டுகளின் தாக்குதல்களில் 447 பொது மக்களும், 142 பாதுகாப்பு படையினரும் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த திட்டம் தவிர மாவோயிஸ்டுகளால் பாதிக்கப்பட்டுள்ள 78 மாவட்டங்களில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களும் மேற்கொள்ளப்படுகிறது.












Click it and Unblock the Notifications