சென்னை மாணவனைக் கடத்திக் கைதான உ.பி. சகோதரர்களின் பரபரப்புப் பின்னணி!
சென்னை: சென்னையில் பத்தாம் வகுப்பு மாணவனைக் கடத்தியதாக கைதான உ.பி.யைச் சேர்ந்த சகோதரர்கள் இருவர் குறித்த பரபரப்புத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர்களது தந்தை ஐந்து பேரைக் கொன்று கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளாராம்.
சென்னை மகாகவி பாரதி நகரைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு படித்து வரும் மாணவன் யுவராஜை கடத்தி வைத்துக் கொண்டு ரூ. 1 கோடி பணம் கேட்டு மிரட்டியதாக சென்னை போலீஸார் நான்கு பேரை கைது செய்துள்ளனர். இவர்களில் ஆஸம் கான் மற்றும் அன்வர் கான் ஆகிய இருவரும் உ.பி.யைச் சேர்ந்தவர்கள்.
இவர்கள் குறித்த பரபரப்புத் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. இந்த இருவரிடமிருந்தும் போலீஸார் 5 துப்பாக்கிகளையும், 43 ரவுண்டு சுடக் கூடிய தோட்டாக்களையும் பறிமுதல் செய்துள்ளனர். இந்த துப்பாக்கிகளும், தோட்டாக்களும் சகோதரர்களின் தந்தைக்குரியதாம்.
இவற்றை இவர்கள் பாதுகாப்புக்காக வைத்திருந்தனரா அல்லது சட்டவிரோத செயல்களில் ஈடுபட வைத்திருந்தனரா என்பது தெரியவில்லை. அதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
இந்த சகோதரர்களின் தந்தை பெயர் அகமது கான். இவர் உ.பியில் தற்போது சிறைவாசம் அனுபவித்து வருகிறார். தனது தம்பியைக் கொன்ற ஐந்து பேரை இவர் பழிவாங்கும் வகையில் கொலை செய்தாராம். இந்த வழக்கில் சிக்கித்தான் தற்போது அகமது கான் சிறையில் அடைபட்டுள்ளார்.
பழிக்குப் பழியாக தனது பிள்ளைகளை எதிரிக்கும்பல் பழி தீர்த்து விடுமோ என்ற அச்சத்தில்தான் தனது இரு மகன்களையும் சென்னைக்கு அனுப்பி வைத்துள்ளார் அகமது கான் என்று தெரிய வந்துள்ளது.
இருவரையும் தற்போது போலீஸார் தனியாக வைத்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். அவர்களுக்கு வேறு ஏதேனும் குற்றச் செயல்களில் சம்பந்தம் உள்ளதா என்பது குறித்தும் விசாரிக்கப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications