கிருஷ்ணகிரி பயங்கரம்: மினி பஸ்-ஜீப் மோதலில் 13 வயது சிறுமி பலி-28 பேர் படுகாயம்
கிருஷ்ணகிரி: இன்று அதிகாலை கிருஷ்ணகிரி அருகே மினி பஸ் - ஜீப் மோதி தீப்பிடித்ததில் 13 வயது சிறுமி பரிதாபமாக இறந்தார். 28 பேர் படுகாயங்களுடன் தப்பினர்.
பெங்களூரைச் சேர்ந்த தொழில் அதிபர் ஹரீஸ் (40) மனைவி மற்றும் உறவினர்களுடன் கோவில் விழாவுக்காக வேலூர் மாவட்டம் சோளிங்கர் அருகே உள்ள வீரகுப்பம் கிராமத்திற்கு ஜீப்பில் வந்து கொண்டு இருந்தார். ஜீப்பை ஹரீஸ் ஓட்டி வந்தார். இன்று அதிகாலை 5-45 மணியளவில் ஜீப் கிருஷ்ணகிரி-சென்னை தேசிய நெடுஞ்சாலை பெத்தாம்பட்டி என்ற இடம் அருகே சென்றது.
அப்போது பெத்தாம்பட்டியில் இருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு ஒரு மினி பஸ் தேசிய நெடுஞ்சாலையைக் கடந்தது.
இதை சற்றும் எதிர்பார்க்காத ஜீப்பை ஓட்டி வந்த ஹரீஸ் மினி பஸ்சின் பக்கவாட்டில் உள்ள டீசல் டேங்கில் பயங்கரமாக மோதினார். இதில் டீசல் டேங்க் உடைந்து திடீரென தீ பிடித்துக் கொண்டது.
இந்த விபத்தில் காரில் இருந்த மோனிஷா (13) என்ற சிறுமி சம்பவ இடத்திலேயே இறந்து விட்டாள். மேலும் தீ பிடித்துக் கொண்டு எரிவதை பார்த்ததும் ஜீப் மற்றும் மினி பஸ்சில் இருந்தவர்கள் அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடிவந்தனர்.
இந்த விபத்தில் காரில் இருந்த தொழில் அதிபர் ஹரீஸ், அவரது மனைவி விஜயா (35), வாசு (35), பாபு (30), பத்மா (35), ஜான் (10), ரோகித் (9) மற்றும் 9 மாத கைக்குழந்தை ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
மேலும் மினி பஸ்சில் இருந்த 20 பயணிகளும் படுகாயம் அடைந்தனர். உடனடியாக அவர்கள் 28 பேரும் கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். காரில் வந்த 8 பேரும் மேல் சிகிச்சைக்காக பெங்களூர் அனுப்பி வைக்கப்பட்டனர்.
ஜீப்-மினிபஸ் முற்றிலுமாக தீ பிடித்து எரிந்ததால் அந்த பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட் டது. தகவல் கிடைத்ததும் பர்கூர், மற்றும் கிருஷ்ணகிரியில் இருந்து தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். ஜீப்-மினி பஸ் முற்றிலுமாக எரிந்து எலும்புகூடாக காட்சியளித்தது. மோதிய வேகத்தில் டீசல் டேங்க் வெடித்து இருந்தால் மினி பஸ், மற்றும் ஜீப்பில் இருந்த அனைவரும் பலியாகி இருப்பார்கள். மெதுவாக தீ பிடித்து எரிந்ததால் அனைவரும் காயத்துடன் உயிர் தப்பி விட்டனர்.
சம்பவ இடத்துக்கு கிருஷ்ணகிரி டி.எஸ்.பி. ரவிகுமார், டவுன் இன்ஸ்பெக்டர் தங்கராஜ் மற்றும் போலீசார் விரைந்து வந்து தீவிர விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் காரணமாக அந்த பகுதியே பரபரப்படைந்தது.












Click it and Unblock the Notifications