சசிகலா உறவினர் ராவணன் விடுதலைக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை
கோவை: ரூ.2 கோடி மோசடி வழக்கில் இருந்து ராவணன் விடுதலை செய்யப்பட்ட உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
சசிகலா உறவினர் ராவணன் மீது ரூ.2 கோடி மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கில் அவர் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் கடந்த 28ம் தேதியுடன் அவரது நீதிமன்ற காவல் முடிந்தது.
எனவே அன்று சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்றக் காவலை நீட்டித்திருக்க வேண்டும். ஆனால் அதற்கு மறுநாள் அவரை நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினார். இதனை சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட் ஏற்க மறுத்து, ராவணனை ரூ.2 கோடி மோசடி வழக்கில் இருந்து விடுவித்து உத்தரவிட்டார்.
இதனை எதிர்த்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு நீதிபதி பி.எஸ்.கர்ணன் முன்னிலையில் விசாரிக்கு வந்தது. அப்போது ராவணன் மீது பல வழக்குகள் உள்ளதால், பல நீதிமன்றங்களுக்கு அவரை அழைத்துச் செல்ல வேண்டிய நிலை உள்ளது.
மேலும் ரூ.2 கோடி மோசடி வழக்கில் அவரை உரிய நேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த முடியவில்லை. இந்த விளக்கத்தை சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட் ஏற்றுக் கொள்ளவில்லை. எனவே மாஜிஸ்திரேட் உத்தரவை ரத்து செய்து, ராவணன் காவலை நீட்டிக்க உத்தரவிட வேண்டும் என்று அரசு தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.
இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி ராவணனை விடுவித்த உத்தரவுக்கு தடை விதித்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications