உத்தர்கண்ட் முதல்வர் பதவி: மத்திய அமைச்சர் ராஜினாமா-பாஜக உதவியோடு ஆட்சியை பிடிப்பாரா?

உத்தர்காண்ட் மாநிலத்தில் பெரும் இழுபறிக்குப் பிறகே காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க உரிமை கோரியது. இருப்பினும் யாரை முதல்வராகத் தேர்வு செய்வது என்பது குறித்து நீண்ட குழப்பம் நீடித்தது.
காங்கிரஸ் மேலிட பிரதிநிதி குலாம்நபி ஆசாத் இது தொடர்பாக பலசுற்று ஆலோசனை நடத்தினார். இறுதியாக விஜய் பகுகுணாவை மாநில முதல்வராக்க தீர்மானிக்கப்பட்டது. விஜய் பகுகுணாவின் சகோதரிதான் ரீட்டா ஜோஷி பகுகுணா. இவர் ஒரு தீவிர ராகுல் காந்தி ஜால்ரா. உத்தரப்பிரதேச மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருக்கிறார். அடிக்கடி சர்ச்சையில் சிக்குவது இவரது வழக்கம்.
இந்நிலையில் விஜய் பகுகுணாவை முதல்வராக்கியது மத்திய அமைச்சர் ஹரீஸ் ராவத் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர். இது தொடர்பாக ராவத்துடன் அவர்கள் நேற்று இரவு முதல் ஆலோசனை நடத்தி வந்தனர். ராவத்துக்கு மொத்தம் 16 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருப்பதாகத் தெரிகிறது. அதாவது காங்கிரஸ் கட்சியின் 32 எம்எல்ஏக்களில் பாதி பேர் இவரை ஆதரிக்கின்றனர்.
விஜய் பகுகுணாவைத் தேர்வு செய்தது தொடர்பாக கருத்து தெரிவித்திருந்த ராவத் சற்றே கடுப்பான தொனியிலேயே செய்தியாளர்களிடம் பதிலளித்து வந்தார். இந்நிலையில் விஜய் பகுகுணாவை தேர்வு செய்ததற்கான தமது எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் மத்திய அமைச்சர் பதவியிலிருந்து ஹரீஷ் ராவத் இன்று ராஜினாமா செய்துள்ளார். தனது கடிதத்தை அவர் பிரதமரிடம் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் அவர் பாஜகவுடனும் தொடர்பில் இருப்பதாகத் தெரிகிறது. இந்த மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி 32 இடங்களிலும் பாஜக 31 இடங்களிலும் வென்றுள்ளன. இதில் 3 பகுஜன் சமாஜ், ஒரு உத்தர்கண்ட் கிராந்தி தளம் கட்சி எம்எல்ஏக்கள் காங்கிரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதன்மூலம் அந்தக் கட்சி ஆட்சிக்கு வந்துள்ளது.
இதில் ராவத் தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் கட்சியைவிட்டு விலகி பாஜக உதவியோடு ஆட்சியைப் பிடிக்க முயலலாம் என்று தெரிகிறது.
இருப்பினும் ராவத்தின் மிரட்டலைப் பொருட்படுத்தாமல் உத்தர்காண்ட் முதல்வராக விஜய் பகுகுணாவையே முதல்வராக இன்று மாலை பதவியேற்க வைத்தது காங்கிரஸ்.
ஆனால், சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க அவர் படாதபாடு பட வேண்டி வரலாம்.












Click it and Unblock the Notifications