பிரபாகரன் மகனை சுட்டுக் கொல்லவில்லையாம், சொல்கிறார் காரியவாசம்!

ஈழப் போரின் இறுதிக் கட்டத்தில் வரலாறு காணாத கொடூரக் கொலைகளையும், மனித உரிமை மீறல்களையும் இலங்கை அரசின் ஒத்துழைப்புடன் அந்த நாட்டின் இனவெறி ராணுவம் அரங்கேற்றியது. இதுதொடர்பான ஆதாரங்கள் பல வெளியாகி விட்டன.
இந்த நிலையில் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரனை கொடூரமாக கொலை செய்தது தொடர்பான ஆதாரத்தை சேனல் 4 டிவி நிறுவனம் நாளை வெளியிடவுள்ளது. அதில் பாலச்சந்திரனை மிக நெருக்கத்தில் வைத்து ஐந்து முறை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ படத்தைக் காண உலக மக்கள் பதைபதைப்புடன் காத்துள்ளனர்.
ஆனால் இந்த வீடியோக் காட்சிகளை இந்தியாவுக்கான இலங்கை தூதர் பிரசாத் காரியவாசம் மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், இந்த வீடியோக் காட்சிகளும் சரி, அதில் உள்ளதாக கூறப்படுவதும் சரி உண்மையானதாக இருக்க வாய்ப்பில்லை. அவை இட்டுக்கட்டியவை. இதைஎங்களிடம் முன்பே கொடுத்து உறுதிப்படுத்தவில்லை அவர்கள். இது பத்திரிக்கை தர்மம் அல்ல. இது உள்நோக்கம் கொண்ட வீடியோ.
பாலச்சந்திரன் இறந்திருக்கலாம். ஆனால் அவன் கொல்லப்பட்டான் என்பதற்கு எங்களிடம் ஆதாரம் இல்லை. இந்தப் புகாரை மறுக்கிறோம்.
போரின்போது 8000 பேர் இறந்தனர். அவர்களில் பலர் விடுதலைப்புலிகள் இயக்கத்தினர். அவர்கள் போரில்தான் இறந்தனர், கொலை செய்யப்படவில்லை.
தற்போது வெளியாகியுள்ள செய்தி இலங்கையின் நன்மதிப்பைக் கெடுக்கும் முயற்சியாகும் என்றார் காரியவாசம்.












Click it and Unblock the Notifications