திமுகவின் மோசமான 'பெர்பார்மன்ஸ்'- வேட்பாளர் தேர்வும் காரணம்?
சங்கரன்கோவில் தொகுதியில் திமுகவின் பெரும் தோல்விக்கு அக்கட்சியின் வேட்பாளர் தேர்வும் ஒரு முக்கியக் காரணம் என்று தொகுதி மக்கள் பேசிக் கொள்கிறார்கள்.
கடந்த திமுக ஆட்சியின்போது நடந்த அத்தனை இடைத் தேர்தல்களிலும் திமுகதான் தொடர்ந்து ஜெயித்து வந்தது. மற்ற கட்சிகள் எல்லாம் எத்தனைதான் முக்கினாலும், முணகினாலும், வெற்றி என்னவோ திமுகவுக்கு மட்டுமே கிடைத்து வந்தது. பென்னாகரத்தில் கூட பாமகவின் கடும் போட்டியையும் மீறி கடைசியில் திமுகதான் வென்றது.
திருமங்கலத்தில் திமுக அறிமுகப்படுத்திய பார்முலாதான் இன்று வரை இடைத் தேர்தல்களில் நாயகனாக விளங்கி வருகிறது. அன்று திமுகவால் அறிமுகப்படுத்தப்பட்ட அதே பார்முலாவைப் பயன்படுத்தித்தான் இன்று சங்கரன்கோவிலில் அதிமுக வீழ்த்தியுள்ளது.
சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் திமுக வேட்பாளராக ஜவகர் சூரியக்குமார் அறிமுகப்படுத்தப்பட்டபோதே சர்ச்சைகளும் கூடவே வெடித்தன. அவர் மீது நில மோசடி வழக்கு நிலுவையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகின. நெல்லை கோர்ட்டில் சில ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வரும் அந்த வழக்கை காரணம் காட்டி சூரியக்குமாரை மாற்ற சிலர் முயன்றனர். இருப்பினும் மு.க.ஸ்டாலின் ஆதரவுடன் வேட்பாளரான சூரியக்குமாரை மாற்ற திமுக மேலிடம் சம்மதிக்கவில்லை என்று தெரிகிறது.
இதனால் திமுகவுக்குள்ளேயே சலசலப்பு நிலவி வந்தது. மேலும் தேர்தல் பிரசாரப் பணிகளை மு.க.அழகிரி தலைமையில் திமுக மேற்கொண்டாலும் கூட அழகிரி முழு மனதுடன் பணியாற்றவில்லை என்றும் ஒரு பேச்சு உள்ளது. மேலும் எப்படியும் ஆளுங்கட்சிதான் வெல்லப் போகிறது, எதற்காக மெனக்கெட வேண்டும் என்ற எண்ணமும் திமுகவினர் மத்தியில் இருந்ததாக தெரிகிறது.
இருப்பினும் எப்படியாவது 2வது இடத்தைப் பிடித்து விட வேண்டும், அதை மதிமுகவுக்கோ அல்லது தேமுதிகவுக்கோ விட்டு விடக் கூடாது என்ற ஒரே எண்ணம் மட்டும் திமுகவினர் மத்தியில் திடமாக இருந்தது. இதனால் வெற்றியை விட 2வது இடம் என்ற எண்ணமே திமுகவினர் மத்தியில் மேலோங்கி இருந்ததால் அவர்கள் வெற்றியைக் குறி வைத்து பயணிக்காத நிலை ஏற்பட்டு விட்டது.
இதை விட முக்கியமாக ஆளும் கட்சியான அதிமுகவின் ஆதிக்கம் கட்சி மட்டத்திலிருந்து மட்டுமல்லாமல் அரசு நிர்வாக அளவிலும் மேலோங்கியிருந்ததால் அதை மீறி வருவது ரொம்பக் கஷ்டம் என்பது கடந்த இடைத் தேர்தல் களங்களில் நிறைந்த அனுபவம் பெற்றுள்ள திமுகவுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
இந்த் தோல்வி திமுகவுக்குப் புதிதில்லை, ஆச்சரியமில்லை. ஆனால் டெபாசிட் பறிபோகும் நிலையில் அக்கட்சி இருப்பதுதான் வியப்பாக உள்ளது.