சேலத்தில் லஞ்சப் பணத்தை கழிவறையில் வீசிய பெண் ஊழியர்
சேலம்: சேலத்தில் முத்திரை ஆய்வாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசாரின் திடீர் சோதனையில், லஞ்சப் பணத்தை கழிவறை வீசிய பெண் ஊழியர் உட்பட 5 பேர் சிக்கினர்.
சேலம் மாவட்டம் ஜான்சன்பேட்டையை அடுத்த ராஜா நகரில் தொழிலாளர் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள முத்திரை ஆய்வாளர் அலுவலகம் உள்ளது. இங்கு சேலம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நேற்று திடீர் சோதனை நடத்த வந்தனர்.
லஞ்ச ஒழிப்பு போலீசார் அலுவலகத்திற்குள் நுழைவதை கண்ட பெண் ஊழியர் ஒருவர், அலுவலகத்தின் பின்புறம் உள்ள கழிவறைக்கு வேகமாக சென்றார். அங்கு தனது கையில் வைத்திருந்த ரூ.2,500 லஞ்சப் பணத்தை கழிவறையில் போட்டுவிட்டு திரும்ப வந்தார்.
இதனை கவனித்த போலீசார், பெண் ஊழியரை பிடித்து விசாரித்தனர். அதன் பிறகு அலுவலகத்தின் அனைத்து கதவுகளையும் பூட்டிவிட்டு, அலுவலகத்தில் இருந்த ஆவணங்களை பரிசோதித்தனர்.
அப்போது கணக்கில் வராத ரூ.20,900 பணம் இருப்பது தெரிய வந்தது. இதனை பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார், முத்திரை ஆய்வாளர்கள் ராஜேந்திரன், ஜெயலட்சுமி, தொழிலாளர் துணை ஆய்வாளர் ஷோபனா, ஊழியர்கள் இருசப்பன், கந்தசாமி உள்ளிட்ட 5 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இது குறித்து விசாரித்து வருகின்றனர்.
முத்திரை ஆய்வாளர் அலுவலகத்தில் நடத்திய திடீர் சோதனையில், பல முக்கிய ஆவணங்கள் சிக்கியிருப்பதாக, லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications