கிருஷ்ணாபுரம் கோயிலில் டம்மி குண்டு: போலீசார் மீது மக்கள் அதிருப்தி
நெல்லை: பாளை அருகே உள்ள கிருஷ்ணாபுரம் கோயிலில் வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டு ஒரு வாரம் ஆகியும் இது குறித்து போலீசார் துப்பு துலக்காமல் மெத்தனமாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பாளை அருகேயுள்ள பிரசித்தி பெற்ற கிருஷ்ணாபுரம் வெங்கடாச்சலபதி கோயிலில் பாலிதீன் பையில் கிடந்த 2 வெடிகுண்டுகளை கடந்த 29ம் தேதி போலீசார் கைப்பற்றினர். அவற்றை சிவந்திப்பட்டி காட்டுப்பகுதிக்குள் எடுத்துச் சென்று சோதனையிட்டபோது ரப்பர் புஷ்கள் மற்றும் கிழிந்து போன சிறிய அட்டைகள் இருப்பது தெரியவந்தது. பாதுகாப்பு ஒத்திகையி்ன் போது வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டதாக முதலில் தகவல் வெளியானது. ஆனால் பின்னர் அதில் சதி திட்டம் அரங்கேறியுள்ளது கண்டறியப்பட்டது.
இதையடுத்து சுதாரித்துக் கொண்ட சிவந்திப்பட்டி இன்ஸ்பெக்டர் சீலக்காரி மற்றும் போலீசார் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். கிருஷ்ணாபுரம் கோயிலில் இரு ஊழியர்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனையால் ஒருவரை போலீசில் சிக்க வைக்க டம்மியாக வெடிகுண்டு வைக்கப்பட்டதாகவும், அது குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
எனினும் சம்பவம் நடந்து ஒரு வாரம் ஆகியும் இதுவரை போலீஸ் தரப்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த வழக்கில் போலீசார் மெத்தனமாக இருந்து வருவதாக பல்வேறு தரப்பில் இருந்தும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications