கொசுவை சுடுவதற்கு பீரங்கி தேவையில்லை: உதயகுமார்

கூடங்குளம் அணு உலைக்கு எதிராக 239வது நாளாக தொடர் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. அவர்கள் மத்தியில் போராட்டகுழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் பேசியதாவது,
போராட்டத்தின் முக்கியமான காலகட்டங்களில் உழைக்கும் மக்களுக்காக பாடுபடக் கூடியவர்கள் வரவில்லை என்பது பெரிய குறையாக இருந்தது. ஆனால் அதை போக்கும் வகையில் நல்லக்கண்ணு தலைமையில் பொதுவுடமை கட்சியினர் வந்திருப்பது நமது போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகும். கூடங்குளம் அணு மின் நிலையத்தை மூடவேண்டும் என்பது தான் எங்களது ஒரே கோரிக்கையாகும். இது அமெரிக்கா போன்ற வெளிநாட்டுக்காரர்கள் பணம் கொடுத்து நடத்தப்படும் போராட்டம் அல்ல.
தமிழக அரசு தொடக்கத்தி்ல் நமது சார்புடையவர்கள் போல் ஒரு நிலை எடுத்துவி்ட்டு இன்று நமக்கு எதிரான செயல்பாட்டை எடுத்துள்ளது கண்டிக்கத்தக்கது. மீனவ மக்கள், தலித், முஸ்லீம் மக்களின் வாழ்வாதாரம், வாழ்வுரிமைகள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகத் தான் இந்த போராட்டம் நடக்கிறது. எம்.எல்.ஏ., எம்.பி. பதவிக்களுக்காக நாங்கள் போராட்டம் நடத்தவில்லை. இந்த நாட்டுக்கு மின்சாரம் கிடைக்கக் கூடாது என்பது எங்கள் நோக்கம் அல்ல. ஆனால் கொசுவை சுடுவதற்கு பீரங்கி தேவையில்லை. அணு உலையினால் ஒரு விபத்து நடந்தால் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுவார்கள்.
மக்களை காவு கொடுத்து பெறும் மின்சாரம் தேவையில்லை. இன்று மத்திய, மாநில அரசுகளை ஒரு சேர எதிர்க்கிறோம். போராட்டததில் கைது செய்யப்பட்ட 18 பேர் விடுவிக்கப்பட்டனர். சுதிஷ், முகிலன் ஆகியோர் விடுவிக்கப்படவில்லை. அவர்கள் நக்சலைட் ஆதரவாளர்கள் என வழக்குப் பதிவு செய்துள்ளனர். அப்படியானால் தமிழகத்தில் நக்சலைட்டுகள் இருக்கிறார்களா என முதல்வர் சொல்ல வேண்டும். போராட்டக்காரர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் பெற வேண்டும். நாங்கள் நினைத்தால் அணு உலையை முற்றுகையிட முடியும். போலீசாரின் துப்பாக்கிக்கு பயப்பட மாட்டோம். அதை விட மக்கள் சக்தி தான் பெரியது. அணு உலையை மூடும் வரை அறவழி போராட்டம் தொடரும் என்றார்.












Click it and Unblock the Notifications