அமைச்சர் செல்லூர் ராஜுவின் மனைவிக்கு விமானத்தில் நெஞ்சு வலி
சென்னை: தமிழக அமைச்சர் செல்லூர் ராஜுவின் மனைவி ஜெயந்திக்கு விமானத்தில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து சென்னையில் விமானம் தரையிறங்கியதும் அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தமிழக அமைச்சரவையில் கூட்டுறவுத்துறை அமைச்சராக இருப்பவர் செல்லூர் ராஜூ. மதுரையைச் சேர்ந்த இவரது மனைவி ஜெயந்தி, விமானத்தில் சென்னைக்குப் புறப்பட்டார்.
ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் இவர் வந்து கொண்டிருந்தபோது திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. வலியால் அவர் துடிதுடித்தார். இதையடுத்து சக பயணிகளும், விமானப் பணிப் பெண்களும் அவருக்கு முதலுதவி அளித்தனர். பின்னர் சென்னை விமான நிலையத்திற்குத் தகவல் போனது. உரிய சிகிச்சை வசதிகளுடன் தயார் நிலையில் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.
இதையடுத்து விமானம் சென்னையில் தரையிறங்கியதும், தயார் நிலையில் இருந்த மருத்துவக் குழுவினர் விமானத்திற்குள் சென்று ஜெயந்திக்கு விரைந்து முதலுதவி சிகிச்சையை அளித்தனர். பின்னர் அவர் தரையிறக்கப்பட்டார்.
அதன் பின்னர் அவரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்ச்சை அளிக்கப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications