மே 12ம் தேதி +2 தேர்வு முடிவுகள் வெளியீடு?
திருச்சி: தமிழகத்தில் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 12ம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிளஸ் டூ பொதுத் தேர்வு கடந்த மார்ச் மாதம் 8ம் தேதி துவங்கி 30ம் தேதி முடிந்தது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 7.61 லட்சம் மாணவ-மாணவியர் பிளய் டூ தேர்வு எழுதினர்.
இந்த ஆண்டு தேர்வில் மொழிப்பாடங்கள் எளிதாக இருந்ததாகவும், இயற்பியல் தேர்வில் 10 மற்றும் 6 மதிப்பெண் கேள்விகள் பாடத்திட்டத்தில் இருந்தே கேட்கப்படவில்லை என்றும் மாணவர்கள் தெரிவித்தனர்.
தற்போது விடைத்தாள் திருத்தும் பணிகள் நடந்து வருகிறது. இந்த பணி வரும் மே மாதம் 2ம் தேதி முடிவடையும். எனவே வரும் மே மாதம் 12ம் தேதி பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்ப்பதாக திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கே. செல்வகுமார் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நிலவி வரும் கடும் மின்வெட்டால் பிளஸ் டூ மாணவ-மாணவியர் தேர்வுக்கு சரியாக படிக்க முடியாமல் கஷ்டப்பட்டனர். இதனால் விடைத்தாள் திருத்தும்போது கடுமை காட்டக் கூடாது என்று மாணவர்களும், அவர்களின் பெற்றோர்களும் எதிர்பார்க்கின்றனர். ஆனால் எப்பொழுதும்போல் தான் விடைத்தாள்கள் திருத்தப்படும் என்று கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மே முதல் வாரத்தில் பிஇ கவுன்சிலிங்கிற்கான விண்ணப்பங்கள் வழங்கப்படும் என்று அண்மையில் திருச்சியில் நடந்த விழா ஒன்றில் பேசிய தமிழக பொறியியல் மாணவர் சேர்க்கை செயலர் வி. ரைமண்ட் உத்திரியராஜ் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு மே மாதம் 9ம் தேதி பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியாகின என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications