2011-12ம் ஆண்டில் டாஸ்மாக் மூலம் அரசுக்கு ரூ.18,000 கோடி வருவாய்: அமைச்சர்

மதுவிலக்கு ஆயத்தீர்வை மானியக் கோரிக்கை மீதான கொள்கை விளக்க குறிப்புகளை அமைச்சர் நத்தம் விசுவநாதன் இன்று சட்டசபையில் தாக்கல் செய்தார்.
அதில் கூறியிருப்பதாவது,
மதுபான விற்பனையை தனியார் விற்பனை செய்து வந்த முறைக்கு முற்றுப்புள்ளி வைத்து அதற்கு பதிலாக சில்லரை விற்பனை செய்யும் உரிமையை அரசுக்கு முழுவதும் சொந்த நிறுவனமான தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்துக்கு வழங்குவது என்று 2003ம் ஆண்டு துணிச்சலான முடிவை அரசு எடுத்தது.
இதன் மூலம் தனியார் செய்து வந்த தீர்வை செலுத்தப்படாத மதுபான விற்பனை தடுக்கப்பட்டு அரசு வருவாய் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அதன் விவரம் வருமாறு:-
2003-2004-ம் ஆண்டு ரூ.3639.93 கோடி, 2004-2005-ம் ஆண்டு ரூ.4872.03 கோடி, 2005-2006-ம் ஆண்டு ரூ.6030.77 கோடி, 2006-2007-ம் ஆண்டு ரூ.7473.61 கோடி, 2007-2008-ம் ஆண்டு ரூ.8821.16 கோடி, 2008-2009-ம் ஆண்டு ரூ.10601.50 கோடி, 2009-2010-ம் ஆண்டு ரூ.12498.22 கோடி, 2010-2011-ம் ஆண்டு ரூ.14965.42 கோடி, 2011-2012-ம் ஆண்டு ரூ.18081.16 கோடி மொத்த வருவாய் கிடைத்துள்ளது.
தரமான உயர்தர மதுபானங்களை தயாரிப்பதற்கு தானியங்களை அடிப்படையாக கொண்ட சாராவி பயன்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது தமிழ்நாட்டில் தானியங்களை கொண்டு சாராவி தயாரிக்கும் வடிப்பாலைகள் எதுவும் இல்லை.
எனவே உயர்தர மதுபானம் தயாரிக்க தேவைப்படும் சாராவி தனியார் நிறுவனங்களால் மற்ற மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படுகிறது. தமிழ்நாட்டில் தானியங்களை அடிப்படையாக கொண்டு சாராவி தயாரிக்கும் வடிப்பாலைகளை அனுமதிப்பது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications