ப.சிதம்பரம் பதவி விலகக் கோரி லோக்சபாவில் பாஜக அமளி
டெல்லி: ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணிய சாமியின் குற்ற்சசாட்டுக்கு பொறுப்பேற்று மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் பதவி விலக வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் பாஜக எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர்.
ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணிய சாமி மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் மீது புகார் தெரிவி்ததார். அவர் தனது புகாரில், ஏர்செல்-மேக்சிஸ் விவகாரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்திற்கு தொடர்பு உள்ளது. ஏர்செல்-மேக்சிஸ் பண பரிமாற்றத்தில் சிதம்பரம் தனது மகன் கார்த்தி சிதம்பரம் பயனடையும் வகையில் செயல்பட்டார். ஆனால் முதல் தகவல் அறிக்கையில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனின் பெயர் மட்டுமே உள்ளது. எனவே, அதில் சிதம்பரம் மற்றும் அவரது மகன் ஆகியோரின் பெயரையும் சேர்க்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அவர் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார்.
இந்நிலையில் இன்று லோக்சபாவில் பாஜக எம்.பி.க்கள் இந்த பிரச்சனையைக் கிளப்பினர். சாமியின் குற்றச்சாட்டுக்கு பொறுப்பேற்று சிதம்பரம் பதவி விலக வேண்டும் என்றும், இந்த விவகாரம் குறித்து பாஜக எம்.பி. யஷ்வந்த் சின்ஹா கொடுத்த நோட்டீஸ் மீது விவாதம் நடத்த வேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர்.
ஆனால் அவர்கள் கோரிக்கையை சபாநாயகர் மீராகுமார் நிராகரித்தார். மேலும் சாமியின் குற்றச்சாட்டை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம்நபி ஆசாத் மறுத்துப் பேசியதால் அவையில் கடும் அமளி ஏற்பட்டது. இதையடுத்து அவையை மீராகுமார் ஒத்தி வைத்தார்.












Click it and Unblock the Notifications