நித்தியானந்தாவை நாங்கள் ஆதரிக்கவில்லை-சங்கர மடம்
காஞ்சிபுரம்: நித்தியானந்தாவை மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக அறிவித்த செயலை காஞ்சி சங்கர மடம் ஆதரிக்கவில்லை. இதுதொடர்பாக நித்தியானந்தா கூறியிருப்பது தவறான தகவல் என்று காஞ்சி சங்கர மடம் கூறியுள்ளது.
இதுதொடர்பாக காஞ்சி காமகோடி பீடம் ஸ்ரீமடம் சமஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கை:
மதுரை திருஞான சம்பந்தர் மடத்தின் 293-வது ஆதீனமாக சுவாமி நித்யானந்தாவை, 292-வது ஆதீனம் நியமித்துள்ளார். இதற்கும் ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்திற்கும் எந்தவித தொடர்பும் கிடையாது.
சுவாமி நித்யானந்தா நியமனத்தில் ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு சங்கராச்சாரியார் ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் எந்தவித ஆதரவோ அல்லது எதிர்ப்போ தெரிவிக்கவில்லை என்பதை இந்த அறிக்கையின் மூலம் தெரியப்படுத்துகிறோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில நாட்களுக்கு முன்பு மதுரை ஆதீனத்தில் நித்தியானந்தா பேட்டி அளித்தபோது, என்மீதான புகார் சர்ச்சையில் இருந்து போரூர் ஆதீனம் விலகி விட்டார். எனக்கு ஆதரவாக காஞ்சி பெரியவர், ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், காஞ்சிப் பெரியவர், அசோக்சிங்கால், பா.ம.க., தலைவர் ஜி.கே.மணி உள்பட 40 பெரிய சமூக அரசியல் தலைவர்கள் நட்புடன் ஆதரவு தெரிவித்துள்ளனர் என்று கூறியிருந்தார்.
மேலும் மாதா அமிர்தானந்த மயியும் தனக்கு ஆதரவு தருவதாக கூறியிருந்தார். இதை உடனடியாக அமிர்தானந்த மயி மடம் மறுத்திருந்தது. தற்போது சங்கர மடமும் மறுத்துள்ளது.












Click it and Unblock the Notifications