பிரதமர் பதவிக்கு தகுதியானவர் நரேந்திர மோடி தான்!: எதியூரப்பா

நிருபர்களிடம் பேசிய அவர், நரேந்திர மோடி குஜராத்தில் மிகச் சிறந்த நிர்வாகத்தை அளித்து வருகிறார். ஆட்சியை நல்ல முறையில் நடத்துகிறார். மேலும் நாட்டிலேயே புகழ்பெற்ற மனிதர் என்று அவரை பற்றி ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. இந் நிலையில் பிரதமர் பதவிக்கு மோடி பொருத்தமானவர், தகுதியானவர்.
எனவே, அவரை பிரதமர் பதவிக்கான வேட்பாளராக பாஜக அறிவிக்க வேண்டும் என்றும், இதுதொடர்பாக இப்போது மும்பையில் நடைபெறும் தேசிய செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் எனவும் கட்சியின் மேலிடத்தை கேட்டுக் கொள்கிறேன்.
அதே நேரத்தில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய், மூத்த தலைவர் அத்வானி ஆகியோருடன் மோடியை ஒப்பிட்டு பேசக் கூடாது.
கர்நாடகம், குஜராத், ராஜஸ்தான் மாநில பாஜகவில் நிலவி வரும் குழப்பங்களுக்குத் தேசிய செயற்குழு தீர்வு காண முயல வேண்டும் என்றார் எதியூரப்பா.
முன்னதாக தனக்கு பதவி தராததால் மும்பையில் நடைபெறும் தேசிய செயற்குழு கூட்டத்தில் பங்கேற்க மாட்டேன் என்று கூறியிருந்த எதியூரப்பா திடீரென தனது முடிவை மாற்றிக் கொண்டுள்ளார்.
அவர் கூறுகையில், வழக்குகள் நிலுவையில் இருப்பதால் என்னால் செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்க செல்ல முடியவில்லை. இன்று மும்பை சென்று செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்வேன். நான் கட்சியின் தலைவர் நிதின் கட்காரியை பெரிதும் மதிப்பவன் என்றார்.
இரு நாட்களுக்கு முன் கட்காரியை எதியூரப்பா மிகக் கடுமையாக விமர்சனம் செய்திருந்தது நினைவுகூறத்தக்கது.
முன்னதாக தனது எதிரிகான கட்சியின் முக்கிய பிரமுகர் சஞ்சய் ஜோஷியை ஒடுக்காவிட்டால் செயற்குழுக் கூட்டத்தில் கலந்து கொள்ள மாட்டேன் என்று நரேந்திர மோடி கூறினார். இதையடுத்து அவர் செயற்குழுவில் இருந்து பாஜக நீக்கியது. இதையடுத்து மோடி திடீரென நேற்று பிற்பகலில் செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்றார்.
அதே போல எதியூரப்பாவும் தனது முடிவை மாற்றிக் கொண்டு கூட்டத்தில் பங்கேற்கச் செல்கிறார்.
கட்சியில் ஒதுக்கப்பட்டுள்ள எதியூரப்பா தன்னை மோடி ஆதரவாளர் போல காட்டி புதிய கோஷ்டியை உருவாக்க முயல்வதாகத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications