சட்டவிரோத சுரங்க அனுமதி : எதியூரப்பாவுக்கு முன்ஜாமீன் வழங்க சி.பி.ஐ. கடும் எதிர்ப்பு
பெங்களூர்: சட்டவிரோத சுரங்கங்களுக்கு அனுமதி கொடுத்த வழக்கில் எதியூரப்பா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு முன்ஜாமீன் கொடுக்க சி.பி.ஐ. கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
எதியூரப்பா முதல்வராக இருந்தபோது சட்டவிரோதமாக சுரங்கம் தோண்ட சில நிறுவனங்களுக்கு அனுமதி கொடுத்தார் என்பது குற்றச்சாட்டு. இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் எதியூரப்பாவுக்கு எதிராக விசாரணைகளை மேற்கொள்ள சி.பி.ஐ.க்கு அனுமதி அளித்தது.
இதைத் தொடர்ந்து எதியூரப்பா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வழக்குப் பதிவு செய்து அவர்களது வீடுகள் உள்ளிட்ட இடங்களில் அதிரடி சோதனகளை நடத்தினர். அதேநேரத்தில் தங்களுக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்று பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் எதியூரப்பாவும் அவரது உறவினர்களும் மனுத்தாக்கல் செய்தனர்.
இந்த மனு மீது இன்று விசாரணை நடைபெற்றது. இன்றைய விசாரணையின் போது உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் பேரில் விசாரணை நடைபெற்று வரும் நிலையில் முன்ஜாமீன் கொடுக்கக் கூடாது என்று சி.பி.ஐ. தரப்பில் வாதிடப்பட்டது. இது தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்யுமாறு எதியூரப்பாவின் வழக்கறிஞருக்கு உத்தரவிட்ட நீதிபதி வெங்கட் சுதர்ஷன் வழக்கின் விசாரணையை மே 29- ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.
எதியூரப்பா, அவரது மகன்கள் ராகவேந்திரா, விஜேந்திரா மற்றும் மருமகன் சோஹன் குமார் ஆகியோர் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications