அமைச்சர் உறவினர் கொலை வழக்கில் ஜாமீனில் வந்தவர் தூக்கில் தொங்கினார்!
விழுப்புரம்: அமைச்சர் சி.வி.சண்முகம் உறவினர் முருகானந்தம் கொலை வழக்கில் கைதாகி சிறை சென்று ஜாமீனில் வெளியே வந்த நபர் திடீரென தூக்குப்போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
திண்டிவனத்தில் கடந்த 2006-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின்போது அப்போது அமைச்சராக இருந்த சி.வி.சண்முகம் வீட்டுக்கு முன்பு அவரது உறவினர் முருகானந்தம் ஓட ஓட விரட்டி கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
கொலை வழக்கில் பாமகவைச் சேர்ந்த விழுப்புரத்தை சேர்ந்த குமரன் மற்றும் விழுப்புரம் எம்.ஆர்.கே. தெருவை சேர்ந்த செழியன் என்கிற இளஞ்செழியன் உள்பட பலரை போலீசார் கைது செய்து செங்கல்பட்டு சி.பி.ஐ. கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவர்களை சென்னை புழல் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இந்தநிலையில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு இளஞ்செழியன் ஜாமீனில் வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று காலை இளஞ்செழியன் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்தார். அவரது உடலிலிருந்து ஒரு கடிதத்தை போலீஸார் கைப்பற்றினர்.
அதில்,
சென்னை புழல் சிறையில் இருக்கும் போது குமரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் என்னை மிரட்டி 2 வெள்ளை பேப்பர், 2 பச்சை பேப்பர் ஆகியவைகளில் கையெழுத்தும், கைரேகையும் பெற்றுள்ளனர்.
சிறையில் என்னை பல முறை கொலை செய்ய முயன்றனர். இது குறித்து நான் சிறைத்துறை அதிகாரியிடம் தகவல் தெரிவித்தேன். அவர்கள் எனக்கு பாதுகாப்பு கொடுத்தனர். பல முறை என்னை கொலை செய்ய எண்ணினார்கள். இதற்கிடை யில் அவர்களே என்னை ஜாமீனில் எடுத்தனர்.
மேலும் 6-6-2012 அன்று மின்னல் ராஜா கொலை வழக்கு விசாரணைக்கு செல்லக் கூட பயமாக உள்ளது. அந்த அளவிற்கு என்னை பாடாய் படுத்தி விட்டனர். தற்போது என் மேல் இருக்கும் 2 கொலை வழக்கிற்கு இவர்கள்தான் காரணம்.
இவர்கள் சட்டத்தில் இருந்து தப்பித்து விடுவார்கள். நீங்கள்தான் நல்ல தீர்வு காண வேண்டும். இனியும் என்னை விட மாட்டார்கள். இதனால் என் குடும்பத்தில் இருப்பவர்களுக்கு ஏதாவது நேர்ந்து விடும். அதனால்தான் நான் இனியும் உயிரோடு இருக்க விரும்ப வில்லை. எனவே நான் தற்கொலை செய்து கொள்கிறேன். என் குடும்பத்தினர்களுக்கு எதுவும் ஆகாமல் பார்த்துக் கொள்ளுங்கள் இது தவிர எனக்கு வேறுவழி தெரியவில்லை என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். குமரனிடம் விசாரணை நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.
இந்த வழக்கில் ஆரம்பத்தில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அவரது மகன் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோரின் பெயர்கள் சேர்க்கப்படாமல் இருந்தது. பின்னர் சி.வி.சண்முகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த பி்ன்னர் வழக்கு சிபிஐக்குப் போனது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications