தேர்தல் முடிஞ்சுருச்சுல்ல... மீண்டும் புதுக்கோட்டை மக்களுக்கு மின்வெட்டு 'ஷாக்'!
புதுக்கோட்டை: இடைத் தேர்தல் முடிவடைந்து விட்ட நிலையில் புதுக்கோட்டைக்கு மீண்டும் மின்வெட்டு திரும்பியுள்ளதாம். இதனால் கடந்த 40 நாட்களுக்கும் மேலாக இடையறதா மின்சார விநியோகத்தால் குதூகலித்திருந்த மக்கள் தற்போது வியர்வையில் நசநசத்துப் போயுள்ளனர்.
தமிழகம் முழுவதும் காற்றாலை மின்சாரம் அபரிமிதமாக இருக்கிறதாக செய்திகள் வந்தவண்ணம் இருந்தாலும் மின்வெட்டு குறைந்தபாடில்லை. தொடர்ந்து சென்னை முதல் குமரி வரை மின்வெட்டு இருக்கத்தான் செய்கிறது.
சென்னையில் ஒரு மணி நேர அதிகாரப்பூர்வ மின்வெட்டு தவிர அவ்வப்போது கரண்ட்டை பிடுங்கி விடுகின்றனர். இது போக பல பகுதிகளில் குறைந்த மின்னழுத்தப் பிரச்சினை உள்ளது. இதனால் பிரிட்ஜ் இயங்கவி்லை, ஏசி இயங்கவில்லை என்று மக்கள் புலம்புகின்றனர்.
இதே நிலைதான் தமிழகத்தின் இதர பகுதிகளிலும். முன்பு சங்கரன்கோவில் இடைத் தேர்தல் நடந்தபோது அங்கு மட்டும் மின்வெட்டு ரத்து செய்யப்பட்டது. தேர்தல் முடிந்ததும் மறுபடியும் மின்சாரம் தடைபட்டது. அதேபோலத்தான் புதுக்கோட்டைக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதும் மின்வெட்டை அங்கு மட்டும் நிறுத்தினர். தற்போது தேர்தல் முடிந்ததைத் தொடர்ந்து மீண்டும் மின்வெட்டு திரும்பியுள்ளதாம்.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் கிட்டத்தட்ட 40 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து மின்சார விநியோகத்தை கண்டு வந்த புதுக்கோட்டையில் மீண்டும் நேரம் வைத்து மின்சாரத்தை ரத்து செய்து வருகின்றனராம்.
நம்முடைய ஓட்டுக்குத்தான் மதிப்பு, நமக்கில்லை என்று மக்கள் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள்.