அப்துல்கலாமை குடியரசுத் தலைவராக்க ஃபேஸ்புக்கில் ஆதரவு திரட்டும் மமதா

குடியரசுத் தலைவராக பிரணாப்பை நிறுத்த கடும் எதிர்ப்பு தெரிவித்த மமதா, முலாயம்சிங்குடன் இணைந்து மன்மோகன்சிங், அப்துல்கலாம், சோம்நாத் சட்டர்ஜியை பரிந்துரைத்தார். பின்னர் பிரணாப்தான் வேட்பாளர் என்றால் அப்துல்கலாம்தான் வேட்பாளர் என்றார். இந்த கலகக் குரல் எல்லாம் நேற்று மாலை பிரணாப்பை அதிகாரப்பூர்வமாக ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வேட்பாளராக அறிவித்ததையடுத்து நீர்த்துப் போனது. பிரணாப்பை முலாயம்சிங்கும் ஆதரிப்பதாக பல்டி அடித்துவிட்டார். மேலும் அப்துல்கலாமும் போட்டியிட தயக்கம் காட்டுவதாகக் கூறப்பட்டது.
இந்நிலையில் கொல்கத்தா திரும்பிய மனம் தளராத மமதா ஃபேஸ்புக் மூலம் அப்துல்கலாமை தேர்ந்தெடுக்க வலியுறுத்தி வருகிறார்.
ஃபேஸ்புக்கில் மமதா எழுதியுள்ளதாவது:
நாட்டின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக அப்துல் கலாமை நான் செய்த தேர்வு, லட்சக்கணக்கான இந்திய மக்களின் தேர்வாகும். லட்சக்கணக்கான இந்தியர்கள் அப்துல் கலாமை குடியரசுத் தலைவர் பதவியில் பார்க்க விரும்பினார்கள். அவர்களது மன உணர்வையே நான் பிரதிபலித்தேன்.
எனது கட்சி மிகவும் சிறிய கட்சி. நாங்கள் பெரிய கட்சி அல்ல. வாய்மையின் அடிப்படையில் நாங்கள் கட்சி நடத்துகிறோம். இதுவரை வாழ் நாள் முழுக்க நான் என் கொள்கையில் உறுதியாக இருந்துள்ளேன். நான் எடுத்த முடிவில் உறுதியாக இருப்பேன்.
ஜனநாயகத்தில் மக்களின் விருப்பமே உச்சமானது. எனவே பொதுமக்கள் அனைவரும் தங்கள் தொகுதி எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களிடம் அப்துல்கலாமை ஆதரிக்கும்படி மனு கொடுக்க வேண்டும். உங்கள் குரலை ஓங்கி எழுப்புங்கள். மக்கள் விருப்பத்துக்கு நான் தலை வணங்குவேன். இந்திய ஏவுகணை உலகின் தந்தையான அப்துல்கலாம் இந்தியர்கள் அனைவருக்கும் முன் உதாரணமாக இருந்து வருகிறார். அவர் அரசியலுக்கு அப்பாற்பட்டவர். அவர் உண்மையை எதிர் நோக்குபவர். நிரம்ப அறிவு உடையவர். இத்தகைய குண நலம் கொண்ட ஒருவரையே குடியரசுத் தலைவர் பதவியில் அமர்த்த இந்தியர்கள் அனைவரும் விரும்புகிறார்கள் என்று கொட்டிக் குமுறியுள்ளார்.












Click it and Unblock the Notifications