அப்துல் கலாம் நிறுத்தப்படும் நிலையில் பிரணாப் முகர்ஜிக்கு இடதுசாரிகள் ஆதரவு?
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், புரட்சிகர சோஷலிஸ்ட் மற்றும் பார்வார்டு பிளாக் ஆகிய 4 கட்சிகளைக் கொண்ட இடதுசாரிக் கூட்டணியானது குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக மிகவும் அடக்கியே வாசித்து வருகிறது.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர் அறிவிக்கப்பட்ட பிறகு இடதுசாரிகள் நிலை தெரியவரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அனைத்து இடதுசாரி கட்சிகளும் வரும் 21-ந் தேதிதான் இறுதி முடிவெடுக்கப்படும் என்று கூறியிருக்கின்றன.
மார்க்சிஸ்ட் கட்சியைப் பொறுத்தவரையில் பிரணாப் முகர்ஜியை நிராகரிக்க முடியாத நிலையில் இருக்கிறது. மேற்கு வங்கத்தில் காங்கிரஸ்- திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகள் இணைந்து 30 ஆண்டுகாலத்துக்கும் மேலான இடதுசாரிகள் ஆட்சிக்கு முடிவு கட்டின. தற்போதோ காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் ஆகியவை முட்டி மோதி நிற்கின்றன.
எப்பொழுது தம்மை திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மமதா நிராகரித்தாரோ அப்போதே மேற்கு வங்க முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யாவை தொடர்பு கொண்டு தம்மை இடதுசாரிகள் ஆதரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். மேற்குவங்கத்து மண்ணின் மைந்தனான பிரணாப்பை மமதா ஆதரிக்காத நிலையில் இடதுசாரிகள் ஆதரித்தால் மக்கள் செல்வாக்கு அதிகரிக்கும் என்பது மேற்கு வங்க இடதுசாரிகளின் கணக்கு என்று கூறப்படுகிறது. இதேபோல் அப்துல்கலாமை பாஜக முன்னிறுத்துவதாலேயே இடதுசாரிகள் அவரை நிராகரித்து இயல்பாகவே பிரணாப் முகர்ஜி பக்கம் சாய்வதற்கான வாய்ப்புகளும் அதிகம் இருக்கின்றன.
காங்கிரஸ் வேட்பாளரை இடதுசாரிகள் ஆதரிக்க முடிவு செய்தால் அனேகமாக 2014-ம் ஆண்டு பொதுத்தேர்தலுக்கான அணி எப்படி அமையும் என்பதற்கான தெளிவான முன்னோட்டம் உருவாகிவிடும் என்பது அரசியல்பார்வையாளர்களின் கருத்து.