ராஜபாளையத்தில் தீவைத்து கொளுத்தப்பட்ட நித்தியானந்தா ஆசிரமம்
ராஜபாளையம்: ராஜபாளையத்தில் செயல்பட்டு வந்த நித்தியானந்தாவின் ஆசிரமத்தை சிலர் தீவைத்துக் கொளுத்தி விட்டனர். இதில் அந்தக் குடிலும், அதில் இருந்த பூஜை சாமான்களும் எரிந்து போய் விட்டனவாம்.
ராஜபாளையம் முடங்கியார் ரோட்டில் நித்யானந்தாவிற்கு சொந்தமான ஆசிரமம் உள்ளது. இங்கு ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பாட்டக்குளம் கிராமத்தை சேர்ந்த நித்யானந்தாவின் சீடர் பழனிவேல் என்ற இளைஞர் தினந்தோறும் பூஜைகள் செய்து வருகிறார்.
கடந்த 14-ந்தேதி பழனிவேல் சொந்த விஷயமாக ஆசிரமத்தை பூட்டி விட்டு வெளியூர் சென்றுள்ளார். இன்று காலை ஊர் திரும்பிய பழனிவேல் வழக்கம் போல் பூஜைகள் செய்வதற்காக ஆசிரமத்திற்கு வந்தார். அப்போது ஆசிரமத்தில் அமைக்கப்பட்டிருந்த குடில் எரிந்து சாம்பலாகி கிடந்தது. உள்ளே இருந்த பூஜை சாமான்களும் எரிந்து போயிருந்தது.
இதுகுறித்து போலீஸில் புகார் கொடுத்தார் பழனிவேல். போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications