தாய் மீது எச்சில் துப்பிய மூதாட்டியை அடித்து கொன்ற மகன் கைது!
திருப்பூர்: தனது தாய் மீது எச்சில் துப்பிய மூதாட்டியை கட்டையால் அடித்து கொலை செய்த மகனை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம் காங்கயத்தை அடுத்த பொடாரம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் லோகநாதன். இவரது மனைவி மரகதம் (60). லோகநாதன் வசிக்கும் அதே தெருவில் அவரது உறவினர் நடராஜ் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்றுமுன்தினம் நடராஜின் மனைவி சரஸ்வதி, தெருவில் நடந்து சென்றார். அப்போது வீட்டிற்குள் இருந்த மரகதம், தெருவை நோக்கி துப்பி உள்ளார். இதில் எதிர்பாராதவிதமாக, மரகதம் துப்பியது சரஸ்வதியின் மீது பட்டுவிட்டது. இதை சரஸ்வதி தட்டிக் கேட்டார்.
இதனால் மரகதம், சரஸ்வதி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த நிலையில் சத்தம் கேட்டு அங்கு வந்த சரஸ்வதியின் மகன் பாஸ்கரன் (26), தனது தாய்க்கு ஆதரவாக பேசினார். மேலும் ஆத்திரமடைந்த அவர், அங்கிருந்த கட்டையால் மரகதத்தின் தலையில் தாக்கினார்.
இதில் தலையில் பலத்த காயமடைந்த மரகதம், சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து தகவல் அறிந்த காங்கயம் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றினர். மேலும் மூதாட்டியை அடித்து கொலை செய்த பாஸ்கரனை கைது செய்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த காங்கேயம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.