தூத்துக்குடியில் அரசு பஸ் டிரைவரை செருப்பால் அடித்த பெண் போலீஸின் கணவர்
தூத்துக்குடி: தூத்துக்குடியில் அரசுப் பேருந்து டிரைவரை செருப்பால் தாக்கி, கொலை மிரட்டல் விடு்த்த பெண் போலீஸின் கணவர் கைது செய்யப்பட்டார்.
தூத்துக்குடியில் இருந்து நெல்லைக்கு பாயிண்ட் டு பாயிண்ட் பேருந்து புறப்பட்டது. பேருந்தை சங்கரன்கோவில் குருக்கள்பட்டியைச் சேர்ந்த டிரைவர் சண்முகவேல் ஓட்டினார். அது தூத்துக்குடி டூவிபுரம் 2வது தெருவில் சென்றபோது பேருந்துக்கு வழிவிடாமல் ஒரு பைக் முந்திச் சென்றது. பைக்கில் 2 பேர் சென்றனர். வெகுநேரமாக பேருந்து டிரைவர் ஹாரன் அடித்தும் அவர்கள் வழிவிடவில்லை. சிறிது தூரம் சென்றதும் பைக் தானாக நின்றுவிட்டது. பலமுறை ஸ்டார்ட் செய்ய முயன்றும் பயனில்லை.
இதையடுத்து பேருந்து டிரைவர் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்து பைக்கில் சென்றவர்களை திட்டினார். உடனே பைக்கின் பின்னால் அமர்ந்து வந்த தூத்துக்குடி 3வது மைல் பகுதியைச் சேர்ந்த வேல்முருகன் ஓடி வந்து டிரைவரை செருப்பால் அடித்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த மத்திய பாகம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து வேல்முருகனை கைது செய்தனர். வேல்முருகனின் மனைவி அமுதா தூத்துக்குடி முத்தையாபுரம் காவல் நிலையத்தில் போலீசாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications