பிரணாபிடம் வாக்குறுதி வாங்கிவிட்டு வாக்களியுங்கள்: கருணாநிதிக்கு சீமான் கோரிக்கை
சென்னை: பிரணாப் முகர்ஜி தான் குடியரசுத் தலைவர் ஆன பிறகு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகிய 3 பேரின் கருணை மனுவை ஏற்பேன் என்று அவரிடம் வாக்குறுதி பெற்ற பிறகே திமுக உள்ளிட்ட கட்சிகள் அவருக்கு வாக்களிக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
குடியரசுத் தலைவர் தேர்தலில் காங்கிரஸ் கட்சி முன்மொழிந்துள்ள வேட்பாளர் பிரணாப் முகர்ஜி வெற்றி பெறுவது நிச்சயமாகிவிட்ட நிலையில் தமிழ்நாட்டு மக்களின் உணர்வு்களுக்கு இதற்கு மேலாவது அவர் மதிப்பளிப்பாரா என்ற கேள்வி எழுகிறது.
குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான தனது பிரச்சாரத்தை தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் இருந்து தொடங்கிய பிரணாப் முகர்ஜிக்கு, காங்கிரஸ் தலைமையிலான ஆளும் கூட்டணியில் இடம் பெற்றுள்ள திமுகவே முதன் முதலில் ஆதரவு தெரிவித்தது. இதனையடுத்து, தற்போது தமிழ்நாட்டின் சட்டமன்ற கட்சிகளில் பலவும் பிரணாப் முகர்ஜிக்கு வாக்களிக்க முடிவு செய்துள்ளன.
இந்த நிலையில் தேர்தலில் வெற்றி பெற்று குடியரசுத் தலைவர் பொறுப்பை ஏற்ற பின், தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு பிரணாப் முகர்ஜி மதிப்பளிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுவது இயற்கையானதே. ஈழத்தில் தமிழினத்தை அழித்தொழித்த இனப் படுகொலைப் போரின் சூத்ரதாரியாகச் செயல்பட்டது மட்டுமின்றி, அந்தப் போரையும், இனவெறி ராஜபக்சே அரசுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் நியாயப்படுத்திப் பேசியவர் பிரணாப் முகர்ஜி.
வெளியுறவுத் துறை அமைச்சராகப் பிரணாப் முகர்ஜி இருந்தபோதுதான் கச்சத் தீவு கடற்பகுதியில் தமிழக மீனவர்கள் மீது பல முறை சிங்கள கடற்படை தாக்குதல் நடத்தியது, அதில் பல மீனவர்கள் கொல்லப்பட்டனர்.
தமிழினத்தின் உரிமைகளைப் பற்றிக் கிஞ்சித்தும் கவலைப்படாத, தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத பிரணாப் முகர்ஜிக்குத் தான், தாங்களே தமிழினத்திற்கு அரணாக இருப்பவர்கள் என்று கூறிக்கொள்ளும் திமுக முதலில் முன்வந்த ஆதரவு அளித்துள்ளது.
தமிழ்நாட்டின் முக்கிய எதிர்க்கட்சியான தேமுதிக, புதிய தமிழகம், தமிழக முஸ்லீம் முன்னேற்றக் கழகம், சமத்துவ மக்கள் கட்சி ஆகியனவும் பிரணாப் முகர்ஜிக்கு வாக்களிக்கப்போவதாக அறிவித்துள்ளன.
பிரணாப் முகர்ஜி தான் இந்தியாவின் அடுத்த குடியரசுத் தலைவர் என்று உறுதியாகிவிட்ட நிலையில், அவரிடமிருந்து திமுக தலைவர் கருணாநிதியும், அவருக்கு வாக்களிக்கப்போவதாக அறிவித்துள்ள தமிழ்நாட்டின் மற்றச் சட்டமன்ற கட்சிகளும் ஒரு வாக்குறுதியைப் பெற வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி கேட்டுக்கொள்கிறது.
ராஜீவ் கொலை வழக்கில் அநியாயமாக மரண தண்டனை விதிக்கப்பட்டு கடந்த 22 ஆண்டுகளாக சிறையில் வாடிவரும் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூன்று தம்பிமார்களின் கருணை மனுவை ஏற்று அவர்களை மரண தண்டனையில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று பிரணாப் முகர்ஜியுடன் இருந்து ஒரு வாக்குறுதியை இக் கட்சிகள் பெற வேண்டும்.
இந்த மூன்று தம்பிகளின் கருணை மனுக்களை மறு பரிசீலனை செய்து, அவர்களின் தண்டனையைக் குறைக்க வேண்டும் என்று தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிய போது, அதற்கு ஆதரவாக நின்ற இந்தக் கட்சிகள், இப்போது அதற்கான வாக்குறுதியை பெறுவதே சரியான அரசியல் அணுகுமுறையாக இருக்கும்.
இப்படியொரு வாக்குறுதியை பெற்ற பிறகு பிரணாப் முகர்ஜிக்கு வாக்களித்தால் அது தமிழர்களின் இன உணர்வை பிரதிபலிப்பதாக இருக்கும். தமிழின உரிமைப் போராட்டங்களும், தமிழரின் அரசியலும் வேறுபட்டதல்ல என்பதை டெல்லி தலைவர்களுக்கு உணர்த்துவதாகவும் இருக்கும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications