நாகை துறைமுகத்தில் கப்பலில் விஷவாயு தாக்கி 3 தொழிலாளர்கள் பலி
நாகை: நாகை துறைமுகத்தில் கப்பலில் விஷவாயு தாக்கி மூன்று தொழிலாளர்கள் பரிதாபமாக பலியானார்கள்.
தமிழக பொது விநியோக திட்டத்திற்குத் தேவையான பாமாயில் மலேசியாவில் இருந்து கப்பல் மூலம் கொண்டு வரப்படுகிறது. பாமாயில் கப்பலில் கொண்டு வரப்பட்டு பின்பு சிறிய கப்பல்கள் (பார்ஜர்) மூலம் கரைக்கு கொண்டு வரப்படுகிறது.
இந்நிலையில் நேற்று நள்ளிரவு மலேசியாவில் இருந்து கப்பல் மூலம் பாமாயில் நாகை துறைமுகத்திற்கு வந்தது. அதனை கப்பலிலிருந்து சிறிய கப்பலில் ஏற்றி கரைக்குக் கொண்டு வரும் பணியில் நாகை ஆரிய நாட்டுத் தெருவைச் சேர்ந்த 12 தொழிலாளர்கள் ஈடுபட்டனர். அவர்கள் கப்பலில் இருந்த பாமாயிலை சிறிய கப்பல்கள் மூலம் கரைக்குக் கொண்டு வந்தனர்.
அப்போது ஒரு குட்டி கப்பலில் இருந்த பாமாயில் திடீர் என கசியத் துவங்கியது. இதனை தொழிலாளர்கள் பம்ப் செய்து சரி செய்ய முயன்றனர். அப்போது சிறிய மோட்டார் புகை கக்கியது. அந்த புகையுடன் விஷவாயு தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் மூச்சு தினறி தொழிலாளர்கள் ஆல்பர்ட் (40), வெங்கடேசன் (40) வேல் (எ) வேலவன் (32) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
மேலும் சைமன் (40), பன்னீர்செல்வம் (60), ரமேஷ் (27), மாசிலாமணி (40) ஆகிய 4 பேர் மயங்கி விழுந்தனர். மயங்கிய அவர்கள் நாகை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.












Click it and Unblock the Notifications