லண்டனில் இருந்து ராஜபக்சவை ஓட ஓட விரட்டுவோம்: பிரிட்டன் தமிழர் ஒன்றியம் அழைப்பு
லண்டன்: லண்டனில் நடைபெறும் ஒலிம்பிக் தொடக்க விழாவில் கலந்து கொள்ள வருகை தரும் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சவை ஓடஓட விரட்டியடிக்க அனைவரும் ஓரணியில் திரள்வோம் என்று பிரிட்டன் தமிழர் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது.
இது தொடர்பாக பிரிட்டன் தமிழர் ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கை:
லண்டனில் இன்று தொடங்கும் ஒலிம்பிக் தொடக்க நிகழ்வில் கலந்துகொள்வதற்காக வருகைதரவுள்ள இலங்கைத் தீவின் இனவெறி அரச அதிபரான மகிந்த ராஜபக்சவை எதிர்த்து குரல் கொடுத்து தமிழர்களின் ஒருமித்த பலத்தின் மூலம் பிரிட்டனை விட்டு வெளியேற்ற வேண்டிய காலத்தை பிரிட்டன் தமிழர்கள் எதிர்கொண்டு நிற்கின்றனர்.
ஏற்கனவே பிரிட்டன் தமிழர்களின் கடும் எதிர்ப்பு போராட்டங்களால் லண்டன் வருகை தந்திருந்த மகிந்த ராஜபக்ச தனது நிகழ்ச்சிகளை ரத்துச் செய்து உடனடியாகவே இலங்கை திரும்பியிருந்தார்.
இருப்பினும் மீண்டும் தமிழர்களுக்கு சவால் விடுகின்ற வகையில் லண்டன் வரும் மகிந்தவை ஒன்றுபட்ட தமிழர்களாக பிரிட்டன் வாழ் தமிழர்கள் அனைவரும் எதிர்கொண்டு விரட்டியடிக்க வேண்டியது அவசியமாகிறது.
போராட்டம் நடைபெறும் இடம்
இந்த வகையில் Aspen Way, இல் அமைந்துள்ள Billingsgate Fish Market முன்பாக இன்று மாலை 5:00 மணி முதல் 9:00 மணி வரை நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டத்தில் அனைத்து பிரிட்டன் வாழ் தமிழ் மக்களையும் கலந்துகொள்ளுமாறு பிரிட்டன் தமிழர் ஒன்றியம் கேட்டுக்கொள்கிறது.
இலங்கைத் தீவில் தமிழர்களை அழித்து, தமிழர்களின் வாழ்விடங்களை பறித்து சிங்கள, பெளத்த மயமாக்கும் முயற்சியில் ஆட்சி நடாத்திவரும் இனப்படுகொலையாளி மகிந்த ராஜபக்சவை ஒரே அணியில் தமிழர்கள் என்ற உணர்வோடு, விரட்டியடிப்போம்.
இதன் மூலம் பிரிட்டனில் இம் முறை ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்ள வருகைதரும் 150 நாட்டு தலைவர்களுக்கும், 1000 க்கும் மேற்பட்ட இராஜதந்திரிகளுக்கும், பத்தாயிரத்துக்கும் அதிகமான விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கும், பல இலட்சம் மக்களுக்கும் தமிழர்களின் உள்ளக் குமுறலையும், தமிழர்களுக்கு இளைக்கப்பட்ட அநீதிகளையும் எடுத்துச் சொல்லும் ஓர் அரிய வாய்ப்பாகவும் அமையும்.
இது போன்றதொரு அரிய சந்தர்ப்பம் எமக்கு இனி எப்போது கிடைக்கும் என்பது தெரியாது. எனவே இச் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி 2009 இல் எவ்வாறு இரண்டு இலட்சத்திற்கும் அதிகமாக தமிழ் மக்கள் கூடி போராட்டங்களை நடத்தினோமோ அதே போன்று பெருமளவில் தமிழர்கள் ஒன்றுதிரண்டு இப் போராட்டத்தை நடத்த வேண்டியது முக்கியமாகிறது.
இப் போராட்டமானது பிரிட்டன் அரசிற்கு எதிரானதாகவோ, ஒலிம்பிக் நிகழ்வுகளை குழப்பும் நோக்கம் கொண்டதாகவோ, அன்றி ஒலிம்பிக்கின் புனித நோக்கத்தை புரிந்து கொள்ளாதவராகவும், மனித நேயத்தை மதிக்கத் தெரியாதவராகவும் விளங்கும் மகிந்த ராஜபக்ச இவ் விளாவில் கலந்துகொள்ள அருகதையற்றவர் என்பதை எடுத்துணர்த்தும் போராட்டமாகவே தமிழர்களால் முன்னெடுக்கப்படவேண்டும் என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறோம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications