குஜராத் "சிங்கம்" நரேந்திர மோடி- புகழாரம் சூட்டிய காங்கிரஸ் எம்.பியால் சர்ச்சை
அகமதாபாத்: குஜராத் முதல்வர் நரேந்திர மோடி "ஒரு சிங்கம்" என்று காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை எம்.பி. விஜய் தர்தா புகழாரம் சூட்டியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
ஜெயின் சமூகத்தினர் சார்பில் விருது வழங்கும் விழா குஜராத் மாநில தலைநகர் அகமதாபாத்தில் நடைபெற்றது. இந்த விருதுகளை முதல்வர் மோடி வழங்கினார். மஹாராஷ்டிராவைச் சேர்ந்த பத்திரிகையாளரும் காங்கிரஸ் எம்.பியுமான விஜய் தர்தாவுக்கும் மோடி விருது வழங்கினார். அவருடன் சிறந்த சமூக சேவைக்கான விருது பாபா ராம்தேவுக்கும் கொடுக்கப்பட்டது. விருதைப் பெற்றுக் கொண்ட காங்கிரசின் விஜய் தர்தா, நரேந்திர மோடியின் நிர்வாகத் திறமைகளைப் பாராட்டியதுடன் அவரை குஜராத்தின் சிங்கம் என்றும் புகழாரம் சூட்டினார்.
விழா மேடையிலேயே விஜய் தர்தாவின் பாராட்டு குறித்து கருத்து தெரிவித்த நரேந்திர மோடி, அவர் என்னைப் பாராட்டிப் பேசியதற்கான விலையை செலுத்த நேரிடும். நிச்சயம் ஊடகங்களில் பெரிய செய்தியாக வெளிவரும். அவரது கட்சி மேலிடம் விளக்க நோட்டீஸ் அனுப்பும் என்றார். நரேந்திர மோடியை காங்கிரஸ் எம்.பி. புகழ்ந்துள்ளது காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சியளித்துள்ளது.