அபாய சங்கிலி வேலை செய்யவில்லை, மீட்புக் குழு உடனே வரவில்லை-பயணிகள் குமுறல்

டெல்லியிலிருந்து சென்னை வந்து கொண்டிருந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் நெல்லூர் ரயில் நிலையத்தைத் தாண்டி போய்க் கொண்டிருந்தபோது திடீரென எஸ் 11 பெட்டியில் தீப்பிடித்துக் கொண்டது. இதில் சிக்கி இதுவரை 50 பேர் உயிரிழந்துள்ளனர். இன்னும் சில உடல்கள் பெட்டியில் இருப்பது தெரிய வந்துள்ளது. அவை முற்றிலும் கருகிப் போய் ஒட்டிய நிலையில் இருப்பதால் அவற்றை மீட்கும் பணி கஷ்டமாகியுள்ளது.
பெரும் சிரமத்திற்கு மத்தியில் உடல்களை மீட்கும் பணி நடந்து வருகிறது. இந்த நிலையில் விபத்தில் சிக்கிய ரயிலின் இதர பெட்டிகள் இன்று முற்பகல் 11.30 மணியளவில் சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தை வந்தடைந்தது.
அதில் வந்த பயணிகள் நடந்த சம்பவம் குறித்த அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீளாத நிலையில் காணப்பட்டனர். பலர் பேசவே முடியாத அளவுக்கு அதிர்ச்சியில் உறைந்திருந்தனர்.
சம்பந்தப்பட்ட எஸ் 11 பெட்டியில் பயணித்து லேசான காயத்துடன் உயிர் தப்பிய 12 பேர் இந்த ரயிலில் சென்னைக்கு வந்து சேர்ந்தனர். அவர்களை உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் ரயில்வே மற்றும் காவல்துறை அதிகாரிகள்.
முன்னதாக காயமடைந்தோர் விபத்து குறித்துக் கூறுகையில், நாங்கள் பயணித்த பெட்டியில் அதிகாலையில் திடீரென தீப்பிடித்துக் கொண்டது. இதனால் என்ன செய்வது என்று எங்களுக்குத் தெரியவில்லை. சிலர் ஜன்னல் வழியாக கடும் சிரமப்பட்டு கீழே குதித்தனர். ரயில் பெட்டியின் இரு கதவுகளையும் எங்களால் திறக்க முடியவில்லை. அதைத் திறக்க முடிந்திருந்தால் மேலும் பலர் உயிர் தப்பியிருக்க முடியும். கதவு ஏன் மூடிக் கொண்டது என்று தெரியவில்லை.
எங்களது பெட்டியில் இருந்த அபாயச் சங்கிலிகளை இழுத்து ரயிலை நிறுத்த முயன்றோம். ஆனால் அபாயச் சங்கிலி சரிவர வேலை செய்யவில்லை. இதனால் பக்கத்துப் பெட்டிகளில் இருந்தோர் அபாயச் சங்கிலிகளைப் பிடித்து இழுத்து ரயிலை நிறுத்த உதவினர். மேலும் எங்களது பெட்டியில் இருந்த சிலரை அவர்கள் தங்களது பெட்டிக்குள் இழுத்துக் காப்பாற்றினர்.
உதவி கோரி நாங்கள் நீண்ட நேரம் குரல் எழுப்பியும் கூட யாரும் வரவில்லை. கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் கழித்தே மீட்புக் குழுவினர் வந்தனர். இதனாலும் உயிரிப்பு அதிகரித்து விட்டது.
காயமடைந்தவர்களில் 10 பேரை நெல்லூரில் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவர்களுக்கு தீக்காயம் கடுமையாக உள்ளதால் அவர்களது நிலை என்னவென்று தெரியவில்லை என்றனர்.












Click it and Unblock the Notifications