கடன் தர மறுத்த எஸ்.பி.ஐ. முன்பு காங்கிரஸ் தொண்டர் உண்ணாவிரதம்

மானாமதுரை கிருஷ்ணராஜபுரத்தைச் சேர்ந்தவர் சங்கர்கணேஷ்(30). காங்கிரஸ் தொண்டர். தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவரான அவருக்கு அரசு பணி எதுவும் கிடைக்கவில்லை. சுயதொழில் செய்ய நினைத்து சிவகங்கை தாட்கோ நிறுவனத்திடம் தனிநபர் கடன் கோரி விண்ணப்பம் செய்தார். கடந்த 2006ம் ஆண்டு அவரது விண்ணப்பம் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. பால்பண்ணை அமைக்க ரூ.1,75,000 தேவை என திட்ட மதிப்பீடு செய்யப்பட்டது. இதில் ரூ.25,000 மான்யமாகவும், ரூ.15,000 சங்கர்கணேஷ் முதலீடு செய்ய வேண்டும் என்றும், மீதம் உள்ள ரூ.1,35,000 பாரத ஸ்டேட் வங்கி மூலமாக கடனாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து கடந்த 2009ம் ஆண்டு அவருக்கு மான்யமாக ரூ.25,000 மானாமதுரை பாரத ஸ்டேட் வங்கி கிளைக்கு அனுப்பபட்டது. கடன் பெற உரிய ஆவணங்களை பெற்றுக் கொள்ளவும் தாட்கோ நிறுவனம் வங்கிக்கு பரிந்தரை செய்தது. ஆனால் வங்கி நிர்வாகம் கடன் தர மறுத்துவிட்டது. வங்கியில் கேட்ட அனைத்து ஆவணங்களையும் சமர்பித்த பிறகும் கடன் தர நிர்வாகம் முன்வரவில்லை. இந்நிலையில் கடன் தரவில்லை என்றால் மான்ய தொகையை திருப்பி அனுப்புமாறு தாட்கோ நிறுவனம் வங்கியைக் கேட்டுக் கொண்டது. அதற்கும் வங்கி தரப்பில் பதில் இல்லை.
கடன் கேட்டு வருடக் கணக்கில் அலைந்தும் கிடைக்காததால் ஆத்திரமடைந்த சங்கர்கணேஷ் நேற்று பகல் 12 மணியளவில் வங்கி முன்பு காங்கிரஸ் கொடியுடன் திடீர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார்.












Click it and Unblock the Notifications