சென்னை ஏர்போர்ட்டில் மர்ம பெட்டியால் பரபரப்பு- சாமி சிலைகள் இருந்ததால் வெடிகுண்டு பீதி ஓய்ந்தது
சென்னை: சென்னை விமான நிலையத்தில் அனாதையாக விட்டு செல்லப்பட்ட அட்டை பெட்டியால், இன்று காலையில் வெடிகுண்டு பீதி ஏற்பட்டது. ஆனால் அதற்குள் 4 சாமி சிலைகள் இருந்ததால் வெடிகுண்டு பீதி ஓய்ந்தது.
சென்னை விமான நிலையத்தில் இன்று காலை 5.30 மணிக்கு லண்டனுக்கு விமானம் ஒன்று புறப்பட்டு செல்ல இருந்தது. இதில் பயணிக்க வேண்டிய பயணிகள் அதிகாலையில் 3 மணிக்கு விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தனர். காலை 5.30 மணிக்கு 100க்கும் மேற்பட்ட பயணிகளுடன் அந்த விமானம் லண்டனுக்கு புறப்பட்டு சென்றது.
இந்த நிலையில் லண்டன் விமானத்தில் செல்ல காரில் வந்த ஒரு பயணி, அட்டைப் பெட்டி ஒன்றை கார் நிறுத்தம் பகுதியில் வைத்து விட்டு சென்றுவிட்டார். கார் நிறுத்த பகுதியில் அனாதையாக கிடந்த அட்டை பெட்டியால் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்த விமான நிலைய அதிகாரிகள், உடனடியாக பெட்டி குறித்து மைக் மூலம் அறிவிப்பு வெளியிட்டனர். ஆனால் அட்டை பெட்டியை எடுத்து செல்ல யாரும் வரவில்லை. இந்த நிலையில் மர்ம அட்டை பெட்டியில் வெடிகுண்டு இருக்கலாம் என்ற பீதி பரவியது.
இதையடுத்து கார் நிறுத்தம் பகுதிக்கு வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் ஸ்கேனர் கருவி மூலம் பெட்டியை பரிசோதித்து பார்த்த போது, வெடிக்கும் தன்மை கொண்ட எதுவும் பெட்டியில் இல்லை என்பது தெரியவந்தது. எனவே பெட்டியை திறந்த பார்த்தனர்.
அந்த அட்டை பெட்டியில் ஆஞ்சுநேயர், விநாயகர், முருகன், அம்மன் ஆகிய 4 சாமி சிலைகள் இருந்தன. பழங்காலத்தை சேர்ந்த இந்த கருங்கல்லான சிலைகளை, போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து விமான நிலையத்தில் பரவிய வெடிகுண்டு பீதி அடங்கியது.
இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், சாமி சிலைகளை விமானத்தில் கடத்தி செல்ல முயன்ற நபர் குறித்து விசாரித்து வருகின்றனர். சாமி சிலைகளை லண்டனுக்கு கடத்தி செல்ல முயன்ற நபர், விமான நிலையத்தில் கெடுபிடிகளுக்கு பயந்து கார் நிறுத்தம் பகுதியில் வைத்துவிட்டு சென்றிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.