குடிபோதையில் ரூ.200 கடனுக்காக நண்பனைக் குத்திக் கொன்ற வாலிபர்: மக்கள் மறியல்
நெல்லை: பாளையங்கோட்டை அருகே 200 ரூபாய் கடனுக்காக கூலித் தொழிலாளி குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாளையங்கோட்டை ரெட்டியார்பட்டியைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி முருகன். அவரும் புதுக்குளத்தைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரும் நண்பர்கள். ஆறுமுகத்திடம் முருகேசன் 200 ரூபாய் கடன் வாங்கியுள்ளார். நேற்று இருவரும் பாரில் அமர்ந்து மது அருந்தியபோது ஆறுமுகம் கடனை திருப்பிக் கேட்டார். முருகேசன் பிறகு தருவதாக கூறியதும் அவர் சமாதானம் அடைந்தார். ஆனால் மீண்டும் முருகேசன் வீட்டுக்கு வந்து கடனை திருப்பித் தருமாறு வற்புறுத்தி தகராறு செய்த ஆறுமுகம் திடீரென முருகேசனை கத்தியால் சரமாரியாகக் குத்திவிட்டு ஓடிவிட்டார்.
இதில் படுகாயம் அடைந்த முருகேசனை நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே இறந்தார். இந்த சம்பவத்தைக் கண்டித்து நேற்று இரவு தெருமக்கள் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் ஜெயபாலன் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக குற்றவாளியை கைது செய்வதாக கூறியதும் அவர்கள் கலைந்து சென்றனர்.