நெடுமாறனின் முதுகெலும்பு எப்படியெல்லாம் வளையுமென்று மக்களுக்கு தெரியும்: கருணாநிதி

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
ஆளுங்கட்சியோடு இணைந்து பயன்பெற வேண்டும் என்பதே பழ.நெடுமாறனின் குறிக்கோளாக இருக்கிறது. அதற்காக திமுகவைத் தாக்கினால் அதிமுகவில் தக்க இடம் கிடைக்கும் என்று நெடுமாறன் கருதுகிறார். 1984ல் ஈழப் போராளிகள் அனைவரையும் ஒருங்கிணைக்கும் முயற்சியில் எம்.ஜி.ஆர். ஈடுபட்டதாகவும், அந்த முயற்சியை முறியடிக்கும் செயலில் நான் (கருணாநிதி) ஈடுபட்டதாகவும் நெடுமாறன் கூறியுள்ளார்.
ஈழப் போராளிகளிடையே சகோதரச் சண்டையைத் தொடங்கி வைத்தது கருணாநிதி தான் என்றும் அவர் கூறியுள்ளார்.
உண்மையில் சகோதர யுத்தத்தைத் தூண்டிவிட்டது பழ.நெடுமாறன் போன்றோர்தான். இதனைப் போராளி இயக்கங்களைச் சேர்ந்தவர்களே நன்கு உணர்வர். நெடுமாறன் வாதப்படி ஈழப் போராளிகள் இயக்கங்களை நான் தான் தூண்டிவிட்டேன் என்று ஒரு வாதத்துக்கு ஒப்புக் கொள்கிறேன். அப்படியிருக்கையில் 1985ல் என் தலைமையில் உருவான டெசோ அமைப்பில் ஒரு முக்கிய உறுப்பினராக நெடுமாறன் சேர்ந்தது ஏன்?
1985 அக்டோபர் 10ல் நெடுமாறன் எனக்கு ஒரு கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்தில், டெசோ இயக்கத்தை மேலும் வளருங்கள். ஏனெனில் தமிழீழம் காணப் போராடும் டெசோ இயக்கத்தைத் தவிர உற்ற துணைவன் வேறு யாருமில்லை என்று எழுதியிருந்தார். ஈழப் போராளிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் எம்.ஜி.ஆர். ஈடுபட்டார் என்றால், நெடுமாறன் எனக்கு எழுதிய கடிதம் கற்பனையானதா?
விடுதலைப் புலிகளுக்கு எதிராக ஆரம்பம் முதலே நான் நடந்துகொண்டேன் என்றும் நெடுமாறன் கூறியுள்ளார்.
1985 ஆகஸ்ட் 23ல் தந்தை செல்வாவின் மகன் சந்திரஹாசன், விடுதலைப்புலிகள் ஆலோசகர் பாலசிங்கம், தமிழீழ விடுதலை இயக்கத்தைச் சேர்ந்த சத்தியேந்திரா போன்றோரை திம்பு பேச்சுவார்த்தை முறிவுக்குப் பிறகு மத்திய அரசு அவர்களை நாட்டை விட்டு வெளியேற உத்தரவிட்டது. தமிழகக் காவல்துறையும் அவர்களைக் கைது செய்தது. இதனைக் கண்டித்து டெசோ அமைப்பு சார்பில் சென்னையில் கண்டனப் பேரணி நடைபெற்றது.
பிறகு ரயில் நிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டு, அந்தப் போராட்டத்தில் க.அன்பழகன், நெடுமாறன் உள்பட ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். இதன் விளைவாக நாடு கடத்தும் உத்தரவை மத்திய அரசு திரும்பப் பெற்றதுடன், கைது செய்த போராளிகளையும் விடுதலை செய்தது.
இலங்கைத் தமிழர் பிரச்சனையில் என் மீது சொல்லப்படும் குற்றச்சாட்டுகளுக்குப் பதில் சொல்வதற்கு எனக்கு முதுகெலும்பு இல்லை என்று நெடுமாறன் கூறுகிறார்.
எனக்கு முதுகெலும்பு இருக்கிறதா இல்லையா என்பதைத் தமிழக மக்கள் அறிவர். என்னை இவ்வாறு அர்ச்சனை செய்யும் நெடுமாறன் முதுகெலும்பு எப்படியெல்லாம் வளையக்கூடியது என்பதையும் மக்கள் அறிவர் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications