சிவகாசி பட்டாசு ஆலை விபத்தில் பலியானவர்களுக்கு நாடாளுமன்றத்தில் அஞ்சலி
டெல்லி: நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்தில் பலியானவர்களுக்கு ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள முதலிப்பட்டி ஓம் சக்தி பட்டாசு ஆலையில் நேற்று மதியம் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் 38 பேர் பலியாகினர். 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்நிலையில் இன்று காலை நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கூடியவுடன் சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்தில் பலியானவர்களுக்கு ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதன் பிறகு நிலக்கரி ஊழலுக்கு பொறுப்பேற்று பிரதமர் பதவி விலக வேண்டும் என்று பாஜகவினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து இரு அவைகளும் நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன. காலை 11 மணிக்கு கூடிய அவைகள் 11.03 மணிக்கு ஒத்தி வைக்கப்பட்டன. அவைகள் மீண்டும் 12 மணிக்கு கூடியவுடன் பாஜகவினர் பிரதமரை பதவி விலக வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதனால் அவை நடவடிக்கைகள் மேற்கொள்ள முடியவில்லை.
இதையடுத்து முதலில் ராஜ்சயபா நாள் பிற்பகல் 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து லோக்சபா நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது. மீண்டும் 2 மணிக்கு கூடிய ராஜ்யசபா சில நிமிடங்களிலேயே ஒத்தி வைக்கப்பட்டது. எதிர்கட்சிகளின் தொடர் அமளியால் நாடாளுமன்றம் 12வது நாளாக முடங்கியுள்ளது. இந்த கூட்டத் தொடர் நாளையுடன் முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications