சென்னை மாநிலக் கல்லூரியில் மீண்டும் மோதல்- மாணவர் ஒருவருக்கு கத்திக் குத்து!

சென்னை மாநிலக் கல்லூரியில் அண்மையில் மாணவர் பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இதில் ஞானகார்த்திக் என்பவர் வெற்றி பெற்றார். இவரது ஆதரவாளர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு தேர்தல் வெற்றியைக் கொண்டாட முயற்சித்தனர். அப்போது எதிர்தரப்பினர் கல்வீசித் தாக்குதலில் ஈடுபட்டனர். இதனால் மோதல் உருவாகும் சூழ்நிலையில் காவல்துறை தலையிட்டு மோதலைத் தவிர்த்தது. பின்னர் 4 நாட்கள் கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்டது. இதைத் தொடர்ந்து நேற்றும் மாணவர்கள் கல்லூரிக்கு வந்திருந்தனர். ஆனால் மாணவி ஒருவர் மரணமடைந்திருந்த காரணத்தால் கல்லூரிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இருப்பினும் ஞானகார்த்திக்கின் ஆதரவாளர்கள் கல்லூரியில் ஒன்றுகூடி தேர்தல் வெற்றியைக் கொண்டாட திட்டமிட்டனர். அப்போது கடற்கரை சாலையில் நின்று கொண்டிருந்த எதிர்தரப்பு மாணவர்கள் மீண்டும் கல்வீசினர். அப்போது காவல்துறையினர் தலையிட்டு மீண்டும் மோதலைத் தவிர்த்தனர். இந்த சம்பவங்களின் போது மாநிலக் கல்லூரியில் நிர்வாக அனுமதியுடன் போலீசார் சோதனை நடத்தி மொத்தம் 8 கத்திகளை பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில் இன்று மீண்டும் கல்லூரிக்கு வந்த ஞானகார்த்திக் ஆதரவாளர்கள் தேர்தல் வெற்றியைக் கொண்டாட முயன்றனர். அப்போதும் எதிர்தரப்பினர் மோதலில் ஈடுபட்டனர். இருதரப்பு மாணவர்களிடையேயான மோதலில் ஒருவர் கத்திக் குத்து காயங்களுடனும் மேலும் இருவர் லேசான காயங்களுடனும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த மோதலால் மாநிலக் கல்லூரியில் பதற்றம் உருவானது. இதையடுத்து மீண்டும் இன்றும் கல்லூரிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications