விழுப்புரம் அருகே தேரோட்டம் நடத்த கோரி சாகும் வரை உண்ணாவிரதம்
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், சங்கராபுரம் அருகே சேஷசமுத்திரம் ஆதிதிராவிடர் காலனி உள்ளது. இங்கு புகழ் பெற்ற அருள்மிகு மாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி திருவிழா நடைபெறுவது வழக்கம்.
இதே போல, இந்த வருட திருவிழா கடந்த மாதம் 6 ம் தேதி ஆடித் திருவிழா தேரோட்டம் நடத்த ஏற்பாடுகள் நடந்தன. இதற்கு அப் பகுதியை சேர்ந்த ஒரு தரப்பினர் மெயின்ரோடு வழியாக தேர் செல்லக் கூடாது என கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் ஒரே கிராமத்திலே இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது. இதனால் அப்போதைய சப் - கலெக்டர் தேரோட்டத்தை ரத்து செய்ததோடு, தோரோட்டம் நடத்த தடை விதித்தார்.
இதனையடுத்து, தற்போதைய சப் - கலெக்டர் விவேகானந்தன் இரு தரப்பினரையும் பேச்சுவார்த்தைக்கு அழைத்து தேரோட்டம் நடத்த நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். ஆனால் இதுவரை தேரோட்டம் நடத்த எந்தவித நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகின்றது.
எனவே, கோயில் தேரோட்டத்தை உடனே நடத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க கோரி அப் பகுதியைச் சேர்ந்த பெண்கள் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை கோயில் வளாகம் முன்பு நேற்று முதல் துவங்கினர்.












Click it and Unblock the Notifications