விலை உயர்வில் இருந்து இந்த முறை பெட்ரோல் மட்டும் 'தப்பியது' எப்படி?!

டீசல், சமையல் எரிவாயு, பெட்ரோல், மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலையை உயர்த்த வேண்டும் என்று எண்ணெய் நிறுவனங்கள் மத்திய அரசை நெருக்கி வந்தன. இதையடுத்து டீசல் விலையை லிட்டருக்கு ரூ. 5 உயர்த்திய மத்திய அரசு, சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கான மானியத்தை கட்டுப்படுத்தியுள்ளது.
அதே நேரத்தில் பெட்ரோல் விலையை இந்த முறை உயர்த்தவில்லை.
பெட்ரோல் விற்பனையால் எண்ணெய் நிறுவனங்களுக்கு லிட்டருக்கு ரூ.6 இழப்பு ஏற்படுகிறது. இந்த இழப்பை சரிக்கட்ட பெட்ரோல் மீதான கலால் வரியை (excise) லிட்டருக்கு ரூ.5.50 குறைத்துள்ளது மத்திய அரசு.
பெட்ரோல் மீதான கலால் வரி இதுவரை லிட்டருக்கு ரூ.14.78 ஆக இருந்தது. அதாவது எண்ணெய் நிறுவனங்கள் ஒரு லிட்டர் பெட்ரோலை விற்கும்போது மத்திய அரசுக்கு ரூ.14.78 கலால் வரி செலுத்தி வந்தன.
இப்போது இந்த வரியை ரூ.5.50 குறைத்துள்ளது மத்திய அரசு. இதனால் எண்ணெய் நிறுவனங்கள் ஒரு லிட்டர் பெட்ரோலை விற்கும்போது மத்திய அரசுக்குச் செலுத்தும் கலால் வரியை ரூ.5.50 குறைத்துக் கட்டலாம்.
இதன்மூலம் ஒரு லிட்டர் பெட்ரோலை விற்கும்போது எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்பட்டு வந்த 6 ரூபாய் இழப்பில் ரூ. 5.50யை மத்திய அரசு ஏற்றுக் கொண்டது போல் ஆகிறது.
இதன்மூலம் பெட்ரோல் விலை உயர்வை மத்திய அரசு தவிர்த்துள்ளது.
ஆனால், டீசல், கேஸ் விலையை உயர்த்துவது தான் மத்திய அரசுக்கு பெரும் கஷ்டமான விஷயமாகும். பெட்ரோல் விலையை நினைத்தபோதெல்லாம் ஏற்றிவிடுவார்கள்.
இதனால் இந்த முறை மத்திய அரசும் எண்ணெய் நிறுவனங்களும் பெட்ரோல் விலையை உயர்த்தவில்லையே என்று யாரும் சந்தோஷப்பட வேண்டாம். அது எப்போது வேண்டுமானாலும் உயரும்.
டீசல் விலை, சமையல் கேஸ் விலையை உயர்த்திய மத்திய அரசு இந்த முறையும் மண்ணெண்ணெய் விலையை உயர்த்தவில்லை. நாட்டில் கீழ்மட்டத்தில வசிக்கும் பரம ஏழை மக்கள் பயன்படுத்தும் எரிபொருள் என்பதால் அதன் விலை உயர்த்தப்படவில்லை.
ஆனால், இந்த மண்ணெண்ணெயை பலரும் மிகக் குறைந்த விலைக்கு வாங்கி வெளிச்சந்தையில் 4 மடங்கு விலைக்கு விற்று வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications