பருவநிலை மாற்றத்தால் குறையும் மீன்வளம்: ஆய்வாளர்கள் எச்சரிக்கை
புவி வெப்பமடைந்துவருவதன் காரணமாக உலகம் முழுவதும் உள்ள கடல்களில் மீன்வளம் கிட்டத்தட்ட 24 சதவிகிதம் குறைந்துவிடும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
பருவநிலை மாற்றத்தினால் கடலில் ஏற்படும் வெப்பம் தொடர்பாக கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைகழகத்தின் மீன் வள ஆய்வு மையம் சமீபத்தில் ஆய்வொன்றை நடத்தியது.கணினி உதவியுடன் 600க்கும் மேற்பட்ட கடல் மீன் வகைகளின் மாதிரிகள் உருவாக்கப்பட்டு தீவிரமாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
பருவநிலை மாற்றம்
இதில் தெரியவந்த தகவல்கள் பற்றி ஆய்வு குழு தலைவர் பேராசிரியர் வில்லியம் சியூங், சுற்றுச்சூழல் பாதிப்பு காரணமாக உலகம் முழுவதும் பருவநிலையில் பெருத்த மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. கடல் வெப்பமும் கணிசமாக அதிகரித்துள்ளது.
இதனால் மீன்களின் வாழ்க்கை முறை பாதிக்கப்படுவது தெரிந்ததே. கடல் வெப்பத்தால் மீன்களின் உடல் வளர்ச்சியும் பாதிக்கப்படுகிறது என தற்போது தெரியவந்துள்ளது. மிகச்சிறிய அளவில் தொடங்கி பல டன் வரை பல்வேறு அளவுகளில் மீன்கள் இருக்கின்றன. கடல் வெப்பம் அதிகரிப்பால், மீன்களின் அதிகபட்ச வளர்ச்சியானது குறைந்துகொண்டே போகிறது.
மீன்வளம் குறையும்
கடந்த 2000ஆம் ஆண்டில் இருந்ததைவிட மீன்களின் எடை 2050ஆம் ஆண்டில் 14 முதல் 20 சதவிகிதம் வரை குறையும் என்று தெரிகிறது. பூமத்திய ரேகையை ஒட்டிய பகுதிகளில் உள்ள கடல்களில்(இந்திய பெருங்கடல், வங்கக்கடல், அரபிக்கடல் உள்பட) இந்த பாதிப்பு அதிகம் இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
மீன்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் பற்றி பிரிட்டிஷ் கொலம்பியாவின் மீன்வள ஆய்வு மையம் பல ஆண்டுகளாக ஆய்வில் ஈடுபட்டு வருகிறது. 30 ஆண்டுகளுக்கு முன்பு டேனியல் பாலி என்ற ஆராய்ச்சியாளர் தலைமையில் இதுதொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டது.
தண்ணீரில் உள்ள ஆக்சிஜனை எடுத்துக் கொண்டுதான் மீன்கள் தொடர்ச்சியாக வளர்கின்றன. கடல் வெப்பம் அதிகரித்தால் போதிய ஆக்சிஜன் கிடைக்காமல் மீன்களின் உடல் வளர்ச்சி குறையும் என்று ஆய்வு முடிவில் டேனியல் கூறியிருந்தார். அதன் அடிப்படையிலேயே தற்போதைய ஆய்வு நடத்தப்பட்டது.
குறையும் ஆக்ஸிஜன்
நீரின் வெப்பம் அதிகரிக்கும்போது அதிலுள்ள ஆக்ஸிஜனின் அளவு குறைந்துவிடுகிறது. இதன்காரணமாக மீன்களின் உடல் எடையும் கணிசமான அளவில் குறைந்துபோய்விடுகிறது என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
கடல் நீரின் வெப்பம் அதிகரிப்பதால் குறிப்பிட்ட மீன்கள் தாங்கள் ஏற்கனவே வாழ்ந்த பகுதிகளில் வாழ முடியாத நிலை ஏற்படுகிறது என்றும். பல மீன் இனங்களின் இனவிருத்தி திறனும் பாதிக்கப்படுகிறது என முந்தைய ஆய்வுகள் காட்டியிருந்தன.
கடல் நீரின் வெப்பம் சற்று அதிகரித்தாலே மீன்களுடைய உடல் எடையில் எதிர்பாராத அளவில் பெரிய மாற்றங்கள் ஏற்படுகின்றன. ஏனென்றால் பாலூட்டி விலங்குகள் போல சீரான உடல் வெப்பம் கொண்டவையல்ல மீன்கள்.
எடை குறையும் மீன்கள்
சுற்றாடலின் வெப்ப நிலைக்கு ஏற்ப மீன்களின் உடல் வெப்பமும் மாறுபடும். மீன்களின் உடல் வெப்பம் அதிகரிப்பதனால் அவற்றுக்கு கூடுதலான ஆக்ஸிஜன் தேவைப்படும். அது கிடைக்காமல் போனால் அவற்றின் உடல் எடை வேகமாக குறைந்துவிடும் என்று இந்த மாற்றத்துக்கு விளக்கம் அளிக்கப்படுகிறது.
கடலில் வெப்பம் அதிகரிக்க அதிகரிக்க வருடத்துக்கு 36 கிலோமீட்டர்கள் என்ற அளவில் மீன்கள் துருவப் பகுதிகளை நோக்கி தமது வாழ்விடங்களை மாற்றிக்கொண்டே போகும் என தற்போதைய ஆய்வுகள் நிரூபித்துள்ளன. இந்த ஆய்வின் முடிவுகள் நேச்சர் கிளைமேட் சேன்ஞ் என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications