திண்டிவனத்தில் பள்ளி மாணவன் பேச மறுப்பு-மனமுடைந்த நண்பன் தற்கொலை!
திண்டிவனம்: திண்டிவனத்தில் பள்ளி விடுதியில் நண்பர் ஒருவர் பேச மறுத்ததால், மனமுடைந்த +2 மாணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திண்டிவனத்தில் உள்ள தனியார் பள்ளியில் +2 படித்து வந்த மாணவர்கள் லியோ விமல்ராஜ்(17) மற்றும் சூர்யா. நெருங்கிய நண்பர்களான இருவரும் பள்ளி விடுதியில் தங்கியிருந்தனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் இருவருக்கும் இடையே ஏற்பட்ட சண்டையில் நட்பு முறிந்தது.
அதன்பிறகு லியோ விமல்ராஜிடம், சூர்யா பேசி கொள்ளவில்லை. இதில் வருத்தமடைந்த லியோ, சூர்யாவிடம் பேச பலமுறை முயற்சி செய்தார். ஆனால் அதை சூர்யா ஏற்று கொள்ளவில்லை.
இந்த நிலையில் திண்டிவனத்தை அடுத்த ஆதனூரை சேர்ந்தவர் விக்டர் பரஞ்ஜோதியின் மகனான லியோ விமல்ராஜ், நேற்று இரவு பள்ளி விடுதியின் கைப்பிடியில் கயிற்றால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இன்று காலையில் விடுதி தங்கியிருந்த மற்ற மாணவர்கள், மாடி படிகளில் வந்த போது, லியோ விமல்ராஜ் தற்கொலை செய்து இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து அறிந்த விடுதி வார்டன், பள்ளி நிர்வாகம் மற்றும் போலீசாருக்கு தகவல் அளித்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு திண்டிவனம் போலீசார் மற்றும் தடயவியல் நிபுணர்களும் விரைந்து வந்தனர்.
லியோ இறந்து கிடந்த இடத்தில் பதிவாகியிருந்த ரேகைகள் மற்றும் தடயங்கள் சேகரிக்கப்பட்டன. லியோவின் உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து விடுதியின் வார்டன் மற்றும் மாணவர்களிடம் போலீசார் விசாரித்தனர்.
தற்கொலை செய்து கொண்ட மாணவன் லியோ தங்கியிருந்த அறையில், போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது தற்கொலை செய்து கொள்ளும் முன் லியோ எழுதி வைத்த கடிதம் ஒன்று கிடைத்தது.
அதில், சூர்யாவும், நானும் நெருங்கி பழகி வந்தோம். ஆனால் சமீபகாலமாக சூர்யா என்னிடம் சரியாக பேசவில்லை. இதனால் நான் மிகவும் மனவேதனை அடைந்து தான் தற்கொலை செய்து கொள்கிறேன். சூர்யா நன்றாக இருக்கட்டும். அடுத்த பிறவியில் நாம் 2 பேரும் மீண்டும் நண்பர்களாக இருப்போம் என்று தெரிவிக்கப்பட்டிருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
மாணவன் ஒருவர் தற்கொலை செய்ததையடுத்து, சம்பந்தப்பட்ட தனியார் பள்ளிக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது. இது குறித்து போலீசார் மேலும் விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications