ஹஜ் யாத்திரையை திடீரென ரத்து செய்தார் சல்மான் குர்ஷித்- அமைச்சரவையிலிருந்து நீக்கம்?

குர்ஷித் சர்ச்சை என்ன?
மாற்றுத் திறனாளிகளுக்காக அறக்கட்டளை நடத்தி வரும் மத்திய சட்ட அமைச்சர் சல்மான்குர்ஷித், மத்திய அரசிடம் இருந்து போலி ஆவணங்கள் மூலமாக ரூ71.50 லட்சம் பெற்றார் என்பது அர்விந்த் கெஜ்ரிவால் குழுவின் குற்றச்சாட்டு. இதனால் சல்மான் குர்ஷித்தை அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும் என்பதை கெஜ்ரிவால் குழு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. சர்ச்சையில் சிக்கியிருக்கும் சல்மான் குர்ஷித் அமைச்சர் பதவியிலிருந்து விலகி விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என்று எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா கட்சியும் வலியுறுத்தி வருகிறது.
மேலும் குர்ஷித்தின் சொந்த தொகுதியான ஃபரூக்காபாத்திலும் அவரது மோசடி தொடர்பாக பிரச்சாரம் செய்யப் போவதாக கெஜ்ரிவால் குழு அறிவித்திருந்தது. தமது தொகுதிக்குள் நுழைந்துவிட்டு அவ்வளவு எளிதாக கெஜ்ரிவால் குழு திரும்பிப் போக முடியாது என்றும் குர்ஷித் கூறிய கருத்தால் பெரும் சர்ச்சை வெடித்தது.
ஹஜ் யாத்திரை ரத்து
இந்த நிலையில் ஹஜ் யாத்திரை செல்ல திட்டமிட்டிருந்த தமது பயணத்தை திடீரென குர்ஷித் ரத்து செய்திருக்கிறார். கடந்த சில வாரங்களாக மத்திய அமைச்சரவையில் மாற்றம் மேற்கொள்ளப்படக் கூடும் என்று தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் ஹஜ் யாத்திரையை குர்ஷித் திடீரென ரத்து செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
அமைச்சரவை மாற்றம்?
தற்போது மேற்கு வங்க மாநிலத்தில் இருக்கும் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி டெல்லி திரும்பியதும் முதல் பணியாக அமைச்சரவை மாற்றம்தான் இருக்கும் என்று கூறப்படுகிறது. நேற்று முன்தினம் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் இதனை உறுதிப்படுத்தியிருந்தார். இந்த அமைச்சரவை மாற்றத்தின் போது சல்மான் குர்ஷித் நீக்கப்படக் கூடும் என்றும் அவருக்கு காங்கிரஸ் கட்சியில் கூடுதல் பொறுப்பு ஒன்று வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இதனால்தான் தமது ஹஜ் யாத்திரையை சல்மான் குர்ஷித் ரத்து செய்திருக்கிறார் என்றும் டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications