கரையை கடக்கும் நிலம் புயலில் 'போட்டோ' எடுக்க வந்த மக்கள்-தடுத்து நிறுத்திய போலீசார்

நிலம் புயல் கரையை கடக்கும் போது சென்னை மற்றும் புதுச்சேரியில் பலத்த சேதம் ஏற்படலாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே எச்சரித்து இருந்தது. இந்த நிலையில் மாலை 4.45 மணி அளவில் நிலம் புயல் கரையை கடக்க துவங்கியது. புயல் முழுவதுமாக கரையை கடக்க சுமார் 2 மணி நேரமாகும் என்பதால், பொதுமக்கள் யாரும் வெளியே நடமாட வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டிருந்தது.
புயல் காரணமாக சென்னை மற்றும் கடலோர பகுதியில் பலத்த காற்று வீசியது. புயல் கரையை எட்டும் முன் சிறிதுநேரம் மழை பெய்தது. ஆனால் புயல் கரையை எட்டிய பிறகு, மழை நின்று பலத்த காற்று வீசியது.
இந்த நிலையில் புயலை நேரடியாக பார்க்க விரும்பிய சிலர், கடற்கரை பகுதியில் கேமராக்களுடன் சுற்றி திரிந்தனர். மேலும் சிலர் கடலை நோக்கி சென்று போட்டோக்களை எடுத்தனர். அப்போது கடற்கரை பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தினர்.
அப்போது அவர்கள், நிலம் புயலில் வரும் தண்ணீரில் காலை நனைக்க வேண்டும். புயலின் போது போட்டோ, வீடியோ எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர். ஆனால் அவர்களின் விபரீத ஆசைக்கு போலீசார் மறுப்பு தெரிவித்து, திருப்பி அனுப்பி வைத்தனர்.
நிலம் புயல் காரணமாக கடற்கரை பகுதிகளில் வசித்த பலரும், அங்கிருந்து பாதுகாப்பான பகுதிகளுக்கு சென்ற நிலையில், சிலர் ஆர்வ கோளாறாக புயலுக்கு இடையே போட்டோ எடுக்க முயன்றது போலீசாருக்கு வியப்பை அளித்தது.












Click it and Unblock the Notifications