விஜயகாந்த் யாருக்கும் அஞ்சாதவரென்றால் ஏன் ஜாமீன் கேட்கணும்? - ஜெ. கிண்டல்

சட்டசபையில் நேற்று நடந்த கூட்டத்தின்போது, தேமுதிக உறுப்பினர்கள், விஜயகாந்த் குறித்துப் பேசியபோது முதல்வர் ஜெயலலிதா குறுக்கிட்டு இவ்வாறு கருத்து தெரிவித்தார்.
துணை நிதி நிலை அறிக்கை மீதான விவாதத்தின்போது தேமுதிக உறுப்பினர் மாபா பாண்டியராஜன் பேசுகையில், நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகள் கொண்டு வாழ்பவர் என்று விஜயகாந்தைப் பாராட்டினார். அப்போது குறுக்கிட்ட முதல்வர் ஜெயலலிதா, நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகள் கொண்டு வாழ்பவர் என்று கூறுகிறார். இப்போது முன் ஜாமீன் பெறுவதற்காக நீதிமன்றத்துக்குச் சென்று உள்ளார். அவரா அஞ்சாதவர்? என்றார்.
இதையடுத்து தேமுதிக உறுப்பினர்கள் எழுந்து முதல்வர் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து சட்டென்று எழுந்த நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், முதல்வர் யார் பெயரையும் குறிப்பிடாமல்தான் கூறினார். நீங்கள் ஏன் முழி என்றதும் காதைத் தொட்டுப் பார்க்கிறீர்கள் எனத் தெரியவில்லை என்றார். ஆனாலும் தேமுதிகவினர் விடாமல் எதிர்ப்புக் குரல் எழுப்பினர். அப்போது குறுக்கிட்ட அமைச்சர் வைத்திலிங்கம், தானத்தில் சிறந்தது நிதானம் என்பார்கள். உங்கள் தலைவர்தான் எப்போதும் நிதானம் இல்லாமல் பேசுகின்றார் என்றார். அதற்கும் தேமுதிக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
தேமுதிக உறுப்பினர் பாண்டியராஜன் குறுக்கிட்டு, அமைச்சர் கூறிய நிதானம் என்ற வார்த்தையை பேரவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இதைக் கேட்டு வேகமாக எழுந்த அமைச்சர் பா.வளர்மதி, நிதானம் என்ற சொல் அவையில் பயன்படுத்தக்கூடாத சொல் இல்லை. எந்தத் தலைவர் நிதானமாக இருக்கிறார். எந்தத் தலைவர் நிதானமாக இல்லை என்பதை மக்கள் அறிவர். மீனம்பாக்கம் விமானநிலையத்தில் அந்தத் தலைவர் நடந்து கொண்ட விதத்தை தொலைக்காட்சிகளில் பார்த்தவர்களுக்குத் தெரியும் என்றார்.
நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் குறுக்கிட்டு, யாரும் பேரவைத் தலைவர் அனுமதியின்றி பேசக்கூடாது. பேரவைத் தலைவரின் அதிகாரத்தை தேமுதிக உறுப்பினர்கள் அவர்களாகவே எடுத்துக் கொள்கின்றனர். அதனை அனுமதிக்கக்கூடாது என்றார்.












Click it and Unblock the Notifications