டெல்லியில் நாளை ‘திராணி’யை காட்டுகிறது காங்கிரஸ்- நாடு முழுவதுமிருந்து தொண்டர்கள் குவிகின்றனர்!
டெல்லி: ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளாலும் எதிர்க்கட்சிகளாலும் நாள்தோறும் வறுத்தெடுக்கப்பட்டு வரும் காங்கிரஸ் கட்சி தமது பலத்தை நிரூபிக்க நாளை டெல்லியில் மிகப் பிரம்மாண்ட பேரணியை நடத்துகிறது.
டெல்லியில் நாளை நடைபெறும் இப்பேரணியில் காங்கிரஸ் முதல்வர்கள். காங்கிரஸ் மாநில தலைவர்கள். வட்டார, ஒன்றிய தலைவர்கள், எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் என பல்லாயிரக்கணக்கானோரை திரட்டியிருக்கிறது காங்கிரஸ்.
இப்பேரணியின் முடிவில் ராம்லீலா மைதானத்தில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில், பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல் காந்தி ஆகியோர் மத்திய அரசின் பொருளாதார நடவடிக்கைகளை நியாயப்படுத்தி பேச இருக்கின்றனர்.
சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது மட்டுமின்றி காங்கிரஸ் கட்சியையே ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சுவாமி ரூ1,600 கோடி மோசடி புகார் மூலம் பீதியூட்டி வரும் நிலையில் டெல்லி பேரணி எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது.