சென்னை-நெல்லை தீபாவளி சிறப்பு ஏசி ரயில்: நகை கொண்டு போவதை சொன்னால் கூடவே போலீஸ் வரும்!

இது குறித்து ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
சென்டிரல்-திருநெல்வேலி சிறப்பு ஏசி ரயில் (எண் 06009) (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் 14ம் தேதி இரவு 10.30 மணிக்கு சென்ட்ரலில் இருந்து புறப்பட்டுச் செல்லும். இந்த ரயில் அரக்கோணம், சேலம், ஈரோடு, திண்டுக்கல், மதுரை வழியாக மறுநாள் பகல் 12.45 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும். இதில் 2 அடுக்கு ஏ.சி. பெட்டிகள் மூன்றும், 3 அடுக்கு ஏ.சி. பெட்டிகள் எட்டும் உள்ளன.
அதே போல திருநெல்வேலி-சென்னை சென்ட்ரல் சிறப்பு ஏசி ரயில் (எண் 06010) மறுமார்க்கத்தில், 12 மற்றும் 15ம் தேதிகளில் திருநெல்வேலியில் இருந்து பிற்பகல் 3 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 5.15 மணிக்கு சென்ட்ரல் ரயில் நிலையம் வந்து சேரும்.
இந்த ரயில்களுக்கான முன்பதிவு இன்று முதல் தொடங்கியுள்ளது.
ரயில் நிலையங்களில் பலத்த பாதுகாப்பு:
இதற்கிடையே தீபாவளி பண்டிகையையொட்டி ரயில் நிலையங்களில் கூட்டம் அலை மோதுவதால் ரயில்வே போலீசார் பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்தியுள்ளனர்.
இது குறித்து ரயில்வே போலீஸ் ஐ.ஜி. ஆறுமுகம் கூறுகையில்,
தமிழகத்தில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. முக்கிய ரயில் நிலையங்களான சென்னை சென்ட்ரல், எழும்பூர், திருச்சி, மதுரை, கோயம்புத்தூர், திருப்பூர், சேலம் ரயில் நிலையங்களில் ஒரு வழிப் பாதைகள் அமைக்கப்பட்டு, மெட்டல் டிடெக்டர் மற்றும் மோப்ப நாய்கள் மூலம் முழுமையான பரிசோதனை செய்யப்பட்டு ரயில் நிலையத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்த பாதுகாப்பு பணிகளில் குற்றப்பிரிவு, போக்குவரத்து, சட்டம் ஒழுங்கு போலீசாரும் இணைந்துள்ளனர்.
ரயில்களில் பட்டாசு போன்ற பொருட்களை பயணிகள் எடுத்துச் செல்ல கூடாது. மீறி எடுத்துச் செல்பவர்கள் பிடிபட்டால் அவர்களுக்கு அபராதத்துடன் மூன்றரை ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படலாம்.
நகை கொண்டு போவதை சொன்னால் போலீஸ் வரும்!:
தீபாவளி பண்டிகையையொட்டி ரயில்களில் தங்கம், வெள்ளி மற்றும் அதிக அளவில் பணத்தை பயணிகள் கொண்டு செல்லும்போது ரயில் நிலையத்தில் உள்ள போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவித்தால், அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க பாதுகாப்பு பணிக்காக ஆயுதம் ஏந்திய போலீசார் அந்த பெட்டியில் பணியமர்த்தப்படுவார்கள்.
ரயில்வே போலீசாரை 9962 500500 என்ற உதவி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இந்த எண் 160 இணைப்புகள் கொண்டது. இதில் 24 மணி நேரமும் புகார் தெரிவிக்கலாம்.
இந்த எண் குற்றப் பிரிவு, சட்டம் ஒழுங்கு, போக்குவரத்து போலீஸ் நிலையங்களுடனும் இணைக்கப்பட்டுள்ளது. இந்த உதவி எண்ணை மின்சார ரயில்களில் பயணம் செய்யும் பயணிகளும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார்.












Click it and Unblock the Notifications