25 ஆண்டுகள் கழித்து இந்தியா வந்த ஆங் சான் சூகி: மன்மோகனுடன் சந்திப்பு

மியான்மர் எதிர்கட்சி தலைவரும், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருமான ஆங் சான் சூகி நேற்று டெல்லியில் வந்திறங்கினார். வீட்டுச் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட அவர் 25 ஆண்டுகள் கழித்து இந்தியா வந்துள்ளார்.
1960களில் சூகியின் தாய் இந்தியாவுக்கான மியான்மர் தூதராக டெல்லியில் பணியாற்றியபோது அவர் அங்கு தான் கல்வி கற்றார். அவர் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் அழைப்பின்பேரில் தான் இந்தியா வந்துள்ளார். 4 நாட்கள் இங்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் அவர் பிரதமர் மன்மோகன் சிங்கை இன்று சந்தித்து பேசினார்.
ஜவஹர்லால் நேருவின் நண்பராக இருந்தவர் சூகியின் தந்தை ஜெனரல் ஆங் சான். நேருவின் பிறந்தநாளான இன்று நேரு நினைவு சொற்பொழிவாற்றும் சூகிக்கு ஜவஹர்லால் நேரு சர்வதேச விருது வழங்கப்படுகிறது.
மியான்மர் ராணுவத்தால் பல ஆண்டுகளாக வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டிருந்த சூகி கடந்த 2010ம் ஆண்டு தான் விடுதலை செய்யப்பட்டார். அதன் பிறகு கடந்த ஏப்ரல் மாதம் நடந்த நாடாளுமன்ற இடைத் தேர்தலில் அவரது கட்சி அமோக வெற்றி பெற்றது.
சிம்லாவில் படித்துக் கொண்டிருந்த கணவர் மைக்கேல் ஆரிஸைப் பார்க்க சூகி கடந்த 1987ம் ஆண்டு இந்தியா வந்தார். அதன் பிறகு தற்போது தான் இந்தியா வந்துள்ளார்.
பிரதமரின் ஜப்பான் பயணம் ரத்து:
பிரதமர் மன்மோகன் சிங் ஜப்பானில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருந்தார். அவர் நாளை டெல்லியில் இருந்து ஜப்பான் புறப்படுவதாக இருந்தது. ஆனால் ஜப்பானில் அரசியல் சூழ்நிலை சரியில்லாததால் அவரது பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது என்று தகவல்கள் கிடைத்துள்ளன.












Click it and Unblock the Notifications