தர்மபுரி வன்முறைக்கே பாமக, வன்னியர் சங்கமே காரணம்: திருமாவளவன்

இது தொடர்பாக தேனியில் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், தர்மபுரி வன்முறைகள் தொடர்பான கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்த இருக்கிறோம்.
தர்மபுரி வன்முறைக்கு பாட்டாளி மக்கள் கட்சி, வன்னியர் சங்கங்களே காரணம். தமிழ்த் தேசியம், தமிழீழம் தொடர்பான போராட்ட களங்களில் பாமகவுடன் விடுதலைச் சிறுத்தைகள் இனைந்து போராடி வருகிறோம். இதை மனதில் கொண்டு சமூக நல்லிணக்கத்தை பாதுகாக்க தமிழ்த் தேசிய அமைப்புகள் முன்வர வேண்டும்.
நாடாளுமன்றத்தில் அன்னிய நேரடி முதலீட்டிற்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் வாக்களிக்கும் என்றார் அவர்.
தமிழக அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்:
இந் நிலையில் இன்று சென்னையில் தர்மபுரியில் கலவரத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் பேசிய திருமாவளவன்,
தர்மபுரியில் கலவரம் தொடர்ந்து 6 மணி நேரம் நடந்திருக்கிறது. காவல்துறை அதிகாரிகளோ, அரசு அதிகாரிகளோ தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பணத்துக்காக காதல் செய்து ஏமாற்றுகிறார்கள் என்று சொல்லுவது அப்பட்டமான பொய். காதல் என்பது ஒருவருடைய தனிப்பட்ட விருப்பம். அது எந்த சாதியாளராக இருந்தாலும் அவர்களின் தனிப்பட்ட விருப்பத்தில் தலையிட உரிமை கிடையாது.
தர்மபுரியில் காதல் திருமணம் செய்துகொண்டவர்களுக்கு வயது குறைவு என்பது அப்பட்டமான பொய். தர்மபுரியில் நடந்த சம்பவத்தை தமிழக காவல்துறையோ, சிபிசிஐடியோ விசாரித்தால் கட்டாயம் உண்மை வெளிவராது. நியாயம் கிடைக்காது.
ஆகவே சிபிஐயிடம் இந்த வழக்கை மாற்ற வேண்டும் என்று கோரி இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்துகிறோம். தர்மபுரி கலவரத்துக்கு முழுக்க முழுக்க தமிழக அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்.
தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எந்தவித பாதுகாப்பும் இல்லாத சூழ்நிலை உள்ளது. இப்படியே போனால் தமிழகம் என்னவாகும் என்பது தெரியவில்லை என்றார் என்றார்.












Click it and Unblock the Notifications