எதிர்கட்சியின்ர் மீது பொய் வழக்கு போடுவதே அதிமுக அரசுக்கு வாடிக்கையாகிவிட்டது: விஜயகாந்த்

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
சேலம் மாவட்டம் தலைவாசலில் நடைபெற்ற தேமுதிக பொதுக்கூட்டத்தில் அதிமுகவினர் ரகளையில் ஈடுபட்டனர். அதில் இரு கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
ஆனால் அதிமுகவினர் அளித்த புகாரின்பேரில் தேமுதிக துணைச் செயலாளர் ஏ.ஆர்.இளங்கோவன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் அழகாபுரம் ஆர்.மோகன்ராஜ், எஸ்.ஆர்.பார்த்திபன், ஆர்.சுபா, மாவட்டச் செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்பட 25க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதில் எஸ்.ஆர்.பார்த்திபன், ராதாகிருஷ்ணன் உள்பட 7 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். ஜனநாயகத்தைப் படுகொலை செய்வதற்கு ஒப்பான இந்தச் செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஆளுங்கட்சியின் செயல்பாடுகளை எதிர்த்து பொதுக்கூட்டங்கள் மூலம் விமர்சனம் செய்தாலே ஆட்சியாளர்களால் பொறுக்க முடியவில்லை.
எதிர்க்கட்சிகளின் மீதும், எதிர்க்கட்சித் தலைவர்களின் மீதும் வேண்டுமென்றே பொய் வழக்குகள் போடுவது அதிமுக ஆட்சிக்கு வாடிக்கையாகிவிட்டது.
இந்த மக்கள் விரோத போக்கு ஜனநாயகத்துக்கு பெரிய சவாலாக அமைந்துள்ளது. தேமுதிகவைப் பொருத்தவரை பொய் வழக்குகளைக் கண்டு அஞ்சவில்லை. வழக்குகளைச் சட்ட ரீதியாக நீதிமன்றத்தில் சந்திக்கத் தயாராக இருக்கிறோம்.
ஆனால் வேண்டுமென்றே திட்டமிட்டு எங்கள் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்களையும், நிர்வாகிகளையும் கைது செய்து மிரட்டி பணிய வைக்கலாம் என்று ஆட்சியாளர்கள் கருதினால், அது பகல் கனவாகவே முடியும்.
தேமுதிகவை யாரும் மிரட்டி பணிய வைக்க முடியாது. மின்வெட்டுப் பிரச்சனை, டெங்கு காய்ச்சல், விலைவாசி உயர்வு என தமிழகத்தில் பல பிரச்சனைகள் இருக்கின்றன. அதில் அரசு கவனம் செலுத்தாமல், பொய் வழக்குகளைப் போட்டு பயமுறுத்துவது ஜனநாயகத்துக்கு விரோதமான செயலாகும்.
தேமுதிகவினர் மீது பொய் வழக்குகள் போட்டு அலைக்கழிக்கும் போக்கை ஆளும் கட்சி உடனடியாகக் கைவிட வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications